ஊட்டி: பனியின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் ஊட்டி வெப்பநிலை மைனஸ் டிகிரிக்கு செல்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நீலகிரியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் கடும் பனி பொழிவு நிலவி வருகிறது. இதனால், ஊட்டி தாவரவியல் பூங்கா, மரவியல் பூங்கா, ரோஜா பூங்காக்களில் உள்ள அலங்கார செடிகள் மீது கோத்தகிரி மிலார் செடிகள் மூடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
தாவரவியல் பூங்காவில் உள்ள புல் மைதானம் சேதமடையாத வகையில் புல் மைதானத்திற்கு காலையில் தண்ணீர் பாய்ச்சும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஊட்டியில் உறை பனியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்றும் பனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால், மாலை முதல் அதிகாலை வரை குளிர் வாட்டியெடுக்கிறது.
நேற்று ஊட்டியில் அதிகபட்சமாக 20 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சம் 2 டிகிரி செல்சியசும் பதிவாகியிருந்தது. கடந்த 10 நாட்களுக்கு மேலாகவே பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதிகபட்சமாக 2 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே வெப்பநிலை பதிவாகி வருகிறது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் ஓரிரு நாட்களில் ‘0’ டிகிரி அல்லது மைனஸ் டிகிரிக்கு ஊட்டியின் வெப்பநிலை செல்லும் அபாயம் உள்ளது. இதனால், இரவு நேரங்களில் கடும் குளிர் ஏற்பட வாய்ப்புள்ளது. நேற்று காலை பனி கொட்டி கிடந்ததால் குதிரை பந்தய மைதானம், தலைகுந்தா, எச்.பி.எப்., தாவரவியல் பூங்கா ஆகியவை வெள்ளை கம்பளம் போர்த்தியது போல் காட்சியளித்தது. சுற்றுலா பயணிகள் குளிரையும் பொருட்படுத்தாமல் இதை கண்டு ரசித்தனர்.
அதேபோல், அவலாஞ்சி, அப்பர்பவானி, கோரகுந்தா, எமரால்டு உள்ளிட்ட பகுதகிளிலும் பனியின் தாக்கம் மிக அதிகமாக காணப்பட்டது. இப்பகுதிகளில் தற்போது 0 டிகிரி செல்சியஸ் முதல் மைனஸ் 1 அல்லது 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி வருகிறது. பனியின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் தேயிலை செடிகள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பனியால் தற்போது தேயிலை தோட்டங்களில் பசுந்தேயிலை வரத்து குறைந்தே காணப்படுகிறது.