வெடிகுண்டு மிரட்டல் காரணமாக உஸ்பெகிஸ்தானில் தரையிறக்கப்பட்ட மாஸ்கோ – கோவா விமானம்

பானாஜி: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 240 பயணிகளுடன் கோவா நோக்கி வந்த சார்ட்டர் விமானம் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் உஸ்பெகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய மூத்த போலீஸ் அதிகாரி கூறியதாவது: “அஷூர் விமான போக்குவரத்து நிறுவனத்தின் மூலம் இயக்கப்படும் விமானம் (AZV2463) ஒன்று மாஸ்கோவில் இருந்து புறப்பட்டு சனிக்கிழமை அதிகாலை 4:15 மணிக்கு கோவாவின் டாம்போலி விமான நிலையத்தில் தரையிறங்கியிருக்க வேண்டும். இந்த நிலையில், டாம்போலி விமானநிலையத்தின் இயக்குநருக்கு 12:30 மணிக்கு, அந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது

இதனைத் தொடர்ந்து விமானம் இந்திய வான் எல்லைக்குள் நுழைவதற்கு முன்பாக, அவசர அவசரமாக உஸ்பெகிஸ்தானில் தரையிறக்கப்பட்டது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக, மாஸ்கோவில் இருந்து கோவா வந்த விமானத்திற்கு அண்மையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதன் காரணமாக அந்த விமானம் குஜராத் மாநிலம் ஜாம்நகர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்து இரண்டு வாரத்தில் மீண்டும் மாஸ்கோ – கோவா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.