வோட்காவுடன் புத்தக் கோயிலில் நுழைந்த ரஷ்ய புத்த துறவி.. சிறையில் தள்ளிய பீகார் போலீஸ்!

மதுபானத்துடன் பீகாரில் உள்ள புத்த கோயிலுக்குள் ரஷ்யாவைச் சேர்ந்த புத்த துறவி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
புத்த துறவிகளுக்கான புனித தலமாகவே கருதப்படுகிறது பீகாரில் உள்ள மகாபோதிக் கோயில். அங்கு வெளிநாட்டு பயணிகள் பலரும் ஆண்டுதோறும் வருகை தருவது வாடிக்கை. அந்த வகையில் ரஷ்யாவைச் சேர்ந்த புத்த துறவியான இடிப்சி அயாஸ் என்பவரும் நேற்று மகாபோதிக் கோயிலுக்கு சென்றிருக்கிறார்.
கோயிலுக்குள் செல்வதற்கு முன்பு அந்த ரஷ்ய நாட்டினரின் உடமைகளை போலீசார் சோதித்திருக்கிறார்கள். அப்போது அவரது பையில் 10 மில்லி லிட்டர் அளவுள்ள வோட்கா மதுபானம் இருந்ததை அடுத்து அவரை பீகார் போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.

ஏனெனில் பீகாரில் மதுபானத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் இடிப்சி அயாஸை கைது செய்ததாக டி.ஜி.பி. அஜய் பிரசாத் கூறியிருக்கிறார். மேலும், வழக்கமான சோதனை நடைமுறைகளை மேற்கொள்ளும் போதுதான் ரஷ்ய துறவியிடம் மதுபானம் இருந்தது தெரிய வந்தது.
இடிப்சியின் செயலில் தடுமாற்றம் இருந்ததாலேயே கட்டாயமாக சோதனை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனையடுத்து மதுபானத்தை பறிமுதல் செய்த போலீசார் இடிப்சி அயாசை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.
அப்போது, தாந்திரீகம் செய்வதற்காகவே அந்த 10 மி.லி. மதுவை கொண்டு வந்தேன் என ரஷ்ய துறவி கூறியிருக்கிறார். அதன் பிறகு ரஷ்ய துறவி மீது வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு கயாவில் உள்ள மத்திய சிறையில் அடைத்திருக்கிறார்கள் போலீசார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.