ஓபிஎஸ் போட்டியிட்டால் நோட்டாவுக்கும் கீழ்தான் – ஜோசியம் சொல்லும் ஜெயக்குமார்

Erode East By-Polls: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதனை, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், வளர்மதி மற்றும் கோகுல இந்திரா உள்ளிட்டோர் சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினர்.

அதைத்தொடர்ந்து, அவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய தேவநாதன்,”ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தன்னை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். நான் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளேன்” என்றார். 

‘திமுக பூஜ்ஜியம்’

அதைத்தொடர்ந்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,”திமுக அரசு மீது வாக்காளர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். அதை மக்களுக்கு எடுத்து சொல்லி திமுகவுக்கு எதிராக மிக பெரிய வெற்றியை அதிமுக பெறும். 2024 மக்களவை தேர்தலில் திமுக பூஜ்ஜியம். அதேபோல், 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக பூஜ்ஜியம் என மக்கள் பாடம் புகட்டும் வகையில் இந்த தேர்தல் அமையும்” என தெரிவித்தார். 

ஓபிஎஸ் குஜராத் பயணம் குறித்த கேள்விக்கு,”இந்தியா ஒரு சுதந்திர நாடு. யார் வேண்டுமானாலும் எங்கு  வேண்டுமானாலும் செல்லலாம். எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச் செயலாளராக கொண்டு சீரும் சிறப்புமாக அதிமுக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தாம்தான் அதிமுக என ஓபிஎஸ் எவ்வாறு சொல்ல முடியும். அவ்வாறு சொல்வது சட்டரீதியாக தவறு.

அதிகாரம் எடப்பாடி பழனிசாமியிடம்…

ஏ ஃபார்ம், பி ஃபார்மில்  கையெழுத்தும் போடும் அதிகாரம் எடப்பாடி பழனிச்சாமியிடம் தான் உள்ளது. 
அதிமுகவை சிறுமைப்படுத்த வேண்டும், அதன்மூலம் அதிமுகவுக்கு தொந்தரவு அளிக்க வேண்டும் என்கிற வகையில் திமுகவின் பி டீமாக ஒபிஎஸ் செயல்படுவதாக அதிமுக தொண்டர்கள் பார்க்கின்றனர்.

ஒபிஎஸ் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டால் அவரை மக்கள் சுயேட்சையாகதான் கருதுவார்கள். இந்த தேர்தலில் நோட்டாவுக்கும், கீழே ஒபிஎஸ் சென்றுவிடுவார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உடனான பேச்சுவார்த்தை சுமூகமாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.