கிருஷ்ணகிரி மாவட்டத்தை அடுத்த ஊத்தங்கரை அருகே சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அனுமன் தீர்த்தம் பகுதியில் திருப்பத்தூரை சேர்ந்த சேகர் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு சொந்த ஊரான திருப்பத்தூருக்கு சென்று இருந்தார். இந்த நிலையில் இன்று காலை அருகில் உள்ள கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் நகைக்கடை சுவற்றில் தொலையிட்டு இருப்பதாக சேகருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சேகர் பார்த்தபொழுது கடையின் பின்பக்க சுவற்றை துளையிட்டு 25 கிலோ அளவிலான வெள்ளி பொருட்கள் மற்றும் 30 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து ஊத்தங்கரை காவல் நிலையத்தில் சேகர் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மோப்ப நாய்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். மேலும் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கடையில் கொள்ளை சம்பவம் அரங்கேறி இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.