திருச்சி அருகே கூத்தைப்பாரில் இன்று ஜல்லிக்கட்டு கோலாகலம்: 800 காளைகள் சீறிப் பாய்ந்தன

திருச்சி: திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பாரில் இன்று ஜல்லிக்கட்டு ேபாட்டி  நடந்தது. இதற்காக ஊர் திடலில் வாடிவாசல் மற்றும் பார்வையாளர்கள், சிறப்பு விருந்தினர்கள் பார்வையிடும் வகையில் மேடை அமைக்கப்பட்டு இருந்தது. திருச்சி மாவட்டம் மட்டுமின்றி புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன.  கால்நடை துறை துணை இயக்குனர் மருதைராஜ் தலைமையிலான மருத்துவ குழுவினர், கால்நடைகளுக்கு பரிசோதனை செய்தனர். அதேபோல் மாடுபிடி வீரர்களுக்கு திருவெறும்பூர் வட்டார மருத்துவ அலுவலர் பாலாஜி தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.

இதன்பிறகு 800 காளைகள், 420 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. காலை 7.45 மணிக்கு வீரர்கள் உறுதிமொழி ஏற்க, ஜல்லிக்கட்டு போட்டியை ஆர்டிஓ தவச்செல்வன் கொடியசைத்து துவக்கி வைத்தார். வாடிவாசலில் இருந்து முதலாவதாக கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதைதொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. காளைகளை போட்டிபோட்டு வீரர்கள் அடக்கினர். களத்தில் பல காளைகள் வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து நின்று விளையாடியது.
களத்தில் காளைகள் முட்டி காயமடைந்த வீரர்களுக்கு அங்கேயே மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். காளைகளை அடக்கிய வீரர்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு எவர்சில்வர் பாத்திரங்கள், ரொக்கத் தொகை மற்றும் பல பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.