சென்னையில் பணத்தகராறில் வாலிபரை அடித்துக்கொன்ற நண்பரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை துறைப்பாக்கம் ஈஸ்வரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஏஜேஷ்(32). இவர் அதே பகுதியில் கோழி இறைச்சி கடை நடத்தி வந்தார். இந்நிலையில் ஏஜேஷ் கடந்த ஆண்டு திருமணத்திற்காக மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்த நண்பர் ஸ்ரீதர் என்பவரிடம் 30 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
இதையடுத்து ஏஜேஷ் வாரந்தோறும் வட்டி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஸ்ரீதர், சம்பவத்தன்று ஏஜிஷிடம் கடைக்கு சென்று கடனை திருப்பி செலுத்துமாறு கேட்டுள்ளார். இதனால் இவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ஸ்ரீதர் ஏஜேஸை தாக்கி தள்ளிவிட்டுள்ளார். இதனால் சுவற்றில் மோதி ஏஜேஷ் பலத்த காயமடைந்தார். இதையடுத்து படுகாயம் அடைந்த ஏஜேஷ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஏஜேஷ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து ஏஜேஷின் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த துரைப்பாக்கம் போலீசார் ஸ்ரீதரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.