புதுடெல்லி: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால், நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம் என்று 50 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
2003 டிசம்பர் 22-ம் தேதி புதிய ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. இந்த திட்டத்துக்கு மத்திய, மாநில அரசு ஊழியர்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், இமாச்சல பிரதேச மாநிலங்களில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக அண்மையில் நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்பப்பட்டது. அப்போது, பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படாது என்று மத்திய அரசு தெரிவித்தது.
இந்த நிலையில், 50 தொழிற்சங்கங்கள் இணைந்து என்ஜேசிஏ என்ற கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் நேற்று முன்தினம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பின்னர், கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சிவ கோபால் மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 2004-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்குப் பிறகு மத்திய, மாநில அரசுப் பணிகளில் சேர்ந்த ஊழியர்கள், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்கப்பட்டு வருகின்றனர். இதன்மூலம் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் மறுக்கப்படுகிறது.
பெரும் தொழில் நிறுவனங்களின் பல்லாயிரம் கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. ஆனால், அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் மட்டும் மறுக்கப்படுவது ஏன்?
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண மத்திய, மாநில அரசு ஊழியர் சங்கங்கள் இணைந்து புதிய கூட்டமைப்பை உருவாக்கி உள்ளோம். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும்.
மத்திய அரசு எங்களது கோரிக்கையை ஏற்க மறுத்தால், 5 லட்சம் அரசு ஊழியர்களுடன் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.