கிருஷ்ணகிரி: அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியரை, தற்காலிக பணிநீக்கம் செய்து, கிருஷ்ணகிரி சிஇஓ மகேஸ்வரி உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பிக்கனப்பள்ளி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 180-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் மாணவிகளின் குறைகளை தெரிவிக்க, மாணவர் மனசு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
இதில் இருந்த புகார்களை மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவினர் பார்த்தனர். அதில், அப்பள்ளியில் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வரும் மஞ்சுநாத் (43) என்பவர் பள்ளி மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வருவதாக புகார் இருந்தது. இது குறித்து மாணவிகளின் பெற்றோரும், பள்ளி தலைமையாசிரியிடம் புகார் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் கோவிந்தன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு பள்ளியில் விசாரணை நடத்தப்பட்டது. இதில், மஞ்சுநாத் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதற்கான அறிக்கையை பெற்ற சிஇஓ., மகேஸ்வரி, பள்ளி ஆசிரியர் மஞ்சுநாத்தை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.