ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மரியாதை

கீவ்,

உக்ரைன் நாட்டில் தலைநகர் கீவின் புறநகர் பகுதியில் நேற்று முன்தினம் மழலையர் பள்ளி ஒன்றின் பின்புறம் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் அந்த நாட்டின் உள்துறை மந்திரி டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி, ராஜாங்க மந்திரி எவ்ஹென் யெனின் உள்பட 18 பேர் பலியானது அங்கு தீராத சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த விபத்தில் உள்துறை மந்திரி பலியானதால், தற்காலிக உள்துறை மந்திரியாக உக்ரைன் தேசிய போலீஸ் படையின் தலைவர் இஹோர் கிளைமென்கோ நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் உணர்ச்சிப்பூர்வமான சந்திப்பை நடத்தினார்.

தலைநகர் கீவ்வில் நடந்த விபத்தில் கொல்லப்பட்ட ஏழு பேரின் குடும்ப உறுப்பினர்களுடன் ஜெலென்ஸ்கி பேசினார். கீவ்வில் நடந்த நிகழ்ச்சியில் ஜெலென்ஸ்கியும் அவரது மனைவியும் உக்ரைனின் நீலம் மற்றும் மஞ்சள் கொடிகளால் மூடப்பட்ட ஏழு சவப்பெட்டிகளில் ஒவ்வொன்றிலும் பூக்களை வைத்தனர். பின்னர் ஜெலென்ஸ்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடன் சுருக்கமாக உரையாடினார்.

முன்னதாக விபத்துக்கான காரணம் தெரியவில்லை, ஆனால் நாடு போரில் இருப்பதால் இது நடந்தது என்று ஜெலென்ஸ்கி கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.