புதுடில்லி: யு.ஏ.இ., அரச குடும்பத்தின் அதிகாரி என்று கூறி, புதுடில்லியில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நான்கு மாதங்கள் தங்கியிருந்து, ௨௩ லட்சம் ரூபாய் வாடகை பாக்கியை தராமல் தப்பியோடியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுடில்லியில் உள்ள ‘லீலா பேலஸ்’ என்ற 5 நட்சத்திர ஹோட்டலில் கடந்தாண்டு ஆக., ௧ம் தேதி முஹமது ஷரீப் என்பவர் தங்க வந்தார்.
மேற்காசிய நாடான, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரி என்று தன்னை அறிமுகம் செய்தார். யு.ஏ.இ., மன்னர் அலுவலகத்தில் பணியாற்றுவதாக அடையாள அட்டை உள்ளிட்டவற்றை காட்டி தங்கினார்.
கடந்தாண்டு நவ., ௨௨ வரை அங்கு தங்கிய அவர், திடீரென மாயமானார். இவர், கடந்தாண்டு செப்., மற்றும் அக்., மாதங்களில், ௧௧ லட்சம் ரூபாய் வரை அறை வாடகை கட்டணத்தை செலுத்தியுள்ளார். ஆனால், ௨௩ லட்சம் ரூபாய் பாக்கியை செலுத்தாமல் தப்பியோடினார்.
இது குறித்து ஹோட்டல் நிர்வாகம் போலீசில் புகார் அளித்தது. இதன்படி நடத்தப்பட்ட விசாரணையில், கர்நாடக மாநிலம் தட்சிண கர்நாடகாவில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹோட்டலில் தங்கியிருந்தபோது, அங்கிருந்த சில விலையுயர்ந்த பொருட்களை அவர் திருடிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நபர் எதற்காக அந்த ஹோட்டலில் நான்கு மாதங்கள் தங்கியிருந்தார் என்பது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement