சென்னை: அரசு பெண் மருத்துவர்களுக்கு மகப்பேறு காலத்தில் வழங்க வேண்டிய பணப் பலன்களை 4 ஆண்டுகள் ஆகியும் வழங்கவில்லை என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழுத் தலைவர் எஸ்.பெருமாள் பிள்ளை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை. தமிழகத்தில் 2018-ம் ஆண்டு முதல் மகப்பேறு விடுப்புக்கான பணப் பலன்களை, மருத்துவ பட்ட மேற்படிப்பு முடித்துள்ள 40 பெண் மருத்துவர்கள் இன்னமும் பெறவில்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவர்களின் பச்சிளங் குழந்தைகளைப் பராமரிக்க வழங்க வேண்டிய ஊதியமும், இன்னும் வழங்கப்படவில்லை. தமிழகத்தில் தினமும் ஏராளமான உயிர்களைக் காப்பாற்றும் மருத்துவர்களுக்கு, இன்னமும் தகுதிக்கேற்ற ஊதியம் தரப்படாமல், 13 ஆண்டுகளாக அநீதி இழைக்கப்படுகிறது.
ஸ்பெஷாலிட்டி மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பு முடித்து, அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வும் வழங்காமல் நிறுத்தி வைத்திருப்பது வேதனை அளிக்கிறது. இதுபோன்ற குறைகளைத் தீர்க்க ஓர் ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் மாதந்தோறும் குறைதீர் மன்றம் நடத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.