உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் இனி தமிழிலும்… பலநாள் கோரிக்கை நிறைவேறியது

உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் நகல்களை இந்தியாவில் உள்ள அனைத்து மொழியிலும் மொழிபெயர்க்கப்படும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவித்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட பலரும் பாராட்டி வருகின்றன்றனர். வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில், இந்திய நீதித்துறையில் அடுத்த படியாக உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் அனைத்து மொழிகளிலும் கிடைக்கப்பெறும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார்.

மேலும், ஆங்கிலத்தில் உள்ள தீர்ப்புகள் கிராமப்புற வழக்குரைஞர்கள் பலருக்கு பயன்படாது என்பதையும் சுட்டிக்காட்டிய அவர் இந்த அறிவிப்பினை வெளியிட்டார். நீதிபதியின் இந்த அறிவிப்பபை வரவேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் இந்த யோசனை செயல்படுத்தப்பட்டால் மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு உதவும் என்று கூறினார்.

அதனை தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என்று மாண்புமிகு தலைமை நீதிபதி தெரிவித்துள்ள கருத்தை முழுமனதுடன் வரவேற்கிறேன். இதனோடு, உயர்நீதிமன்றங்களில் மாநில அலுவல் மொழிகளை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற நமது நீண்டநாள் கோரிக்கையையும் நிறைவேற்றுவது நீதியை நாட்டின் சாமானிய மக்களுக்கு அருகில் கொண்டு வரும்” என இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதேபோல, பாமக நிறுவனர் ராமதாஸ் இதுகுறித்து பாராட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியிடப்படும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியிருக்கிறார். தீர்ப்புகளை பாமரர்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை வழக்கு தொடுக்கும் பாமர மக்கள் அறிந்துகொள்ள வசதியாக மாநில மொழிகளில் வெளியிட வேண்டும்; சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழ் அறிவிக்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகிறது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை தமிழ் உள்ளிட்ட 9 மொழிகளில் வெளியிடும் திட்டம் ஏற்கெனவே 17.07.2019-ஆம் நாள் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், அடுத்த சில வாரங்களில் இத்திட்டம் முடக்கப்பட்டுவிட்டது. இப்போது தொடங்கப்படும் திட்டம் அதுபோல் இல்லாமல் தடையின்றி நீடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றம் நிறைவேற்ற வேண்டும். இதை வலியுறுத்தி விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தில் மீண்டும் ஒரு தீர்மானத்தை அரசு நிறைவேற்ற வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.