தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த என்.எஸ்.கே.கே.அருண்குமார் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமராஜ் ஆகியோர் இல்ல திருமண நிகழ்விற்காக, முன்னாள் முதல்வரரும் தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று கலந்துகொண்டார். பெரியகுளம் அருகே உள்ள மதுராபுரி பகுதியில் எடப்பாடி ஆதரவாளர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர்.
வரவேற்பு நிகழ்ச்சியை தேனி மாவட்ட எடப்பாடி அதிமுக பொறுப்பாளரும் கம்பம் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான எஸ் டி கே சர்க்க, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்வி உதயகுமார் தலைமையில் ஏற்பாடு செய்திருந்தார். அதன்படி தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு பூரண கும்பம் மரியாதை உடன் மலர்கள் தூவியும், செண்டைமேளம், தப்பாட்டம், டிரம் செட், கரகாட்டம்,தேவராட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், சண்டி மேளம் முழங்கி ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.
வரவேற்பு நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்த மேடையில் ஏறிய எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் ஆபி.உதயகுமார் வெள்ளிவால் கொடுத்து வரவேற்றார். செல்லூர் ராஜு மற்றும் தேனி மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதனை அடுத்து வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, “புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கனவை நனவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். நமது வழி தனி வழி” என பேசி கட்சியினரை உற்சாகப்படுத்தியதோடு, “தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த எனக்கு வரவேற்ற அனைவருக்கும் நன்றி” என தெரிவித்து அங்கிருந்து கம்பத்தில் நடைபெறும் கல்யாண நிகழ்வில் கலந்து கொள்வதற்கு புறப்பட்டு சென்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM