கோவை மாவட்டம் ரத்தினபுரியை சேர்ந்த சந்திரபாபு என்பவர் ஆந்திராவிலிருந்து கஞ்சா வாங்கி வந்து பதுக்கி வைத்திருப்பதாக கோவை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அவரிடம் நடத்திய விசாரணையில் 8.2 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. அதேபோன்று சந்திரபாபுவுக்கு உதவியாக இருந்த 8 பேர் கைது செய்யப்பட்டதுடன் ரூ.42,400 ரொக்கம் , பல்சர் பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான சந்திரபாபுவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் காவல் உதவி ஆய்வாளர் மகேந்திரன் என்பவருடன் பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை அடுத்து ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் எஸ்.ஐ மகேந்திரனை கோவை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதற்கு முன் கோவையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் பணியாற்றிய போது மகேந்திரன் சந்திரபாபுவை கைது செய்துள்ளார். பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்ததும் மகேந்திரனை தொடர்பு கொண்ட சந்திரபாபு கஞ்சா வியாபாரம் குறித்து பேசி உள்ளார். மகேந்திரனுக்கு ஆந்திர மாநிலத்தில் கஞ்சா பயிரிடும் வியாபாரிகள் வரை தொடர்பு இருந்துள்ளது.
மேலும் கஞ்சா எங்கு வாங்க வேண்டும், அதை எப்படி கோவைக்கு கொண்டு வர வேண்டும், எங்கு பதுக்க வேண்டும், யாரிடம் விற்பனை செய்ய வேண்டும், போலீசில் சிக்காமல் இருப்பது எப்படி என அனைத்து நுணுக்கங்களையும் மகேந்திரன் சந்திரபாபுவுக்கு சொல்லித் தந்து வழிநடத்தியுள்ளார். இந்த விவகாரம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஈரோடு சைபர் கிரைம் எஸ்.ஐ மகேந்திரனை கைது செய்த கோவை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.