இளம்பெண்ணை கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி ஏரியில் வீசிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வேப்பனப்பள்ளி அருகே ஆந்திர மாநில எல்லையில் உள்ள ஓ.என்.கொத்தூர் பகுதியில் உள்ள ஏரியிலிருந்து நேற்று துர்நாற்றம் வீசியதால் அவ்வழியாக சென்றவர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு ஏரிக்கரையில் மூட்டை ஒன்று கிடந்துள்ளது.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மூட்டையை பிரித்து பார்த்ததில் இளம் பெண்ணின் உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதைத்தொடர்ந்து அந்தப் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அந்தப் பெண்ணின் உடலில் காயங்கள் இருந்த நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சுமார் 25 மதிக்கத்தக்க இளம் பெண்ணை அடித்து கொலை செய்து, உடலை சாக்கு மூட்டையில் கட்டி ஏரிக்கரையில் வீசியது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு உயிரிழந்த இளம் பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? இளம் பெண்ணை கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி ஏரியில் வீசி சென்ற மர்ம நபர்கள் யார்? என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.