சம்பந்தப்பட்ட தரப்பினர் விடுத்த கோரிக்கைக்கு அமையவே பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் மரணமடைந்த சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணையின் சாட்சி விசாரணைகளை தமது உத்தியோகபூர்வ அறைக்குள் நடத்த தீர்மானித்ததாக கொழும்பு மேலதிக நீதவான் ரஜிந்ரா ஜயசூரிய இன்று பகிரங்க நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மரணம் சம்பவந்தமான வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டதே நீதவான் இதனை கூறியுள்ளார்.
உறவினர்கள் விடுத்த கோரிக்கை
மரணம் சம்பந்தமான பல்வேறு தகவல்கள் ஊடகங்களில் வெளியாகி இருப்பதால், மரண விசாரணையின் சாட்சி விசாரணைகளை பகிரங்கமற்ற வகையில் நடத்துமாறு உயிரிழந்தவரின் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அத்துடன் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகள் சம்பந்தப்பட்ட அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கை கிடைத்துள்ளது.
எனினும் மரணத்திற்கான காரணம் தொடர்பில் நீதிமன்றம் இன்னும் முடிவுக்கு வரவில்லை எனவும் நீதவான் கூறியுள்ளார்.
சாட்சியமளித்த ஷாப்டரின் சகோதரர்
இதனையடுத்து மரண விசாரணைகள் சம்பந்தமான சாட்சி விசாரணைகள் நீதவானின் உத்தியோகபூர்வ அறையில் இடம்பெற்றன.
தினேஷ் ஷாப்டரின் சகோதரரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மரணம் சம்பந்தமான வழக்கின் மேலதிக விசாரணை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.