பதவியை ராஜினாமா செய்கிறார் கவர்னர்? – பிரதமர் மோடி எடுக்கும் முடிவு!

மகாராஷ்டிர மாநில ஆளுநர் பதவியில் இருந்து விலக, அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருப்பவர் பகத் சிங் கோஷ்யாரி, 80. இவர், முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசுடன் முட்டல் மோதல் போக்கை கடைபிடித்தவர். தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில், சிவசேனா அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே – பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஏக்நாத் ஷிண்டே அரசுடன் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி சுமுகமான உறவை கடைபிடித்து வருகிறார்.

80 வயதாகும் மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, ஆளுநர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான விருப்பத்தை, பிரதமர் நரேந்திர மோடி மும்பைக்கு வந்த போது தெரிவித்து விட்டதாக, ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக, சமூக வலைதளமான ட்விட்டரில், மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:

மகாராஷ்டிரா போன்ற ஒரு பெரிய மாநிலத்தின் ஆளுநராக பணியாற்றுவது எனக்கு கிடைத்த மரியாதை மற்றும் பாக்கியம். புனிதர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் வீரம் மிக்க போராளிகளின் பூமி இது. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக மகாராஷ்டிர மாநில மக்களிடம் இருந்து நான் பெற்ற அன்பையும், பாசத்தையும் என்னால் மறக்கவே முடியாது.

பிரதமர் நரேந்திர மோடி மும்பை வருகையின் போது, அனைத்து அரசியல் பொறுப்புகளில் இருந்தும் விடுபட்டு, எனது வாழ்நாள் முழுவதும் வாசிப்பு, எழுதுதல் மற்றும் பிற செயல்பாடுகளில் செலவிட வேண்டும் என்ற எனது விருப்பத்தை அவரிடம் தெரிவித்தேன். பிரதமரிடமிருந்து நான் எப்போதும் அன்பை மட்டுமே பெற்றிருக்கிறேன். இந்த விவகாரத்திலும் அதைப் பெறுவேன் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.