சென்னை: தமிழக மின்சார வாரியம் 2,000 மெகாவாட் திறனில் கோவை, தேனி, கன்னியாகுமரியில் நீர்மின் நிலையங்களை அமைக்க உள்ளது.
கடந்த ஆண்டு சட்டப் பேரவையில் உரையாற்றிய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் 11 இடங்களில் 7,500 மெகாவாட் திறனில் நீர்மின் நிலையங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பைச் செயல்படுத்த மின்வாரியம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதன்படி, முதற்கட்டமாக கோவை ஆழியாறில் 1000 மெகாவாட், கன்னியாகுமரி கோதையாறு மற்றும் தேனி மணலாறில் தலா 500 மெகாவாட் திறனில் புதிய நீர்மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த நீர்மின் நிலையங்கள் பொது, தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட உள்ளன. இந்த நீர்மின் நிலையங்கள் 2 அணைகளுக்கு இடையே அமைக்கப்படும். உயரமான அணைப் பகுதியில் மின்னுற்பத்தி செய்யப்படும். அப்போது அங்கிருந்து வெளியேறும் தண்ணீர் தாழ்வான பகுதியில் உள்ள அணையில் சேர்த்து வைக்கப்படும். பின்னர், மீண்டும் அந்தத் தண்ணீர் பைப் மூலம் உயரமான பகுதியில் உள்ள அணைக்குக் கொண்டு செல்லப்பட்டு மின்னுற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.