பட்ஜெட் 2023: இன்னும் சில நாட்களில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இதில் பல துறையினருக்கும், சாமானியர்களுக்கும், வணிகர்களுக்கும், மாத சம்பளதாரர்களுக்கும் பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. மகக்ளவைத் தேர்தலுக்கு முன்னர் மோடி அரசாங்கத்தின் கடைசி முழு பட்ஜெட் இது என்பதால் இதில் அரசாங்கம் பல நல்ல அறிவிப்புகளை வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பல ஆண்டுகளாக மாற்றம் செய்யப்படாமல் இருக்கும் வரி அடுக்குகள் மற்றும் வடி வரம்பிலும் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வரி செலுத்துவோரின் இணக்கச் சுமையைக் குறைக்க, மிகவும் ஒத்திசைவான TDS கட்டமைப்பை உருவாக்குவது, நிலையான விலக்கு (ஸ்டாண்டர்ட் டிடக்ஷன்) போன்ற கூடுதல் பலன்களை வழங்குவது போன்ற புதிய சலுகை வரி முறையை வரவிருக்கும் பொது பட்ஜெட்டில் அரசாங்கம் கொண்டுவரலாம். பல துறையினர் சமர்ப்பித்துள்ள பட்ஜெட் விருப்பப் பட்டியலின்படி, தனிநபர் வருமான வரி விஷயத்தில் ஆண்டு வருமானம் ரூ. 20 லட்சம் வரை உள்ள குறைந்த மற்றும் நடுத்தர வருமான வரி செலுத்துவோருக்கு அரசாங்கம் சிறிது நிவாரணம் அளிக்க வேண்டும்.
அதன்படி, பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில், பசுமைப் பத்திரங்களின் வட்டிக்கு (கிரீன் பாண்ட்) வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் மூலதன ஆதாய விகிதங்கள் மற்றும் வைத்திருக்கும் காலம் (ஹோள்டிங் பீரியட்) போன்றவற்றை சீராக்குவதற்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வரி செலுத்துவோரின் சிக்கலான தன்மை மற்றும் இணக்கச் சுமையை குறைக்க அரசாங்கம் TDS கட்டமைப்பை அறிமுகப்படுத்தக்கூடும் என கூறப்படுகின்றது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் தொடர்பான TDS நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படலாம். அதன்படி, நிலைத்தன்மை மற்றும் ஆற்றல் திறனை மேம்படுத்தும் மூலோபாய துறைகளுக்கு முதலீடு மற்றும் உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டங்கள் (பிஎல்ஐக்கள்) பரிசீலிக்கப்படலாம்.
வருமான வரி விலக்கு
வருமான வரி விலக்கு வரம்பு அதிகரிக்கப்பட்டால், செலவு செய்வதற்கான அதிக ரொக்கத் தொகை மக்களிடம் இருக்கும். இது கொரோனா நோய்த்தொற்று காரணமாக பொது நுகர்வில் ஏற்பட்ட மந்தநிலையை சரிசெய்ய உதவி நாட்டில் உருவான பொருளாதார மந்தநிலையிலிருந்தும் மீள உதவும்.
தற்போதைய வரி அடுக்கின்படி, 2.5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்துக்கு எந்த வரியும் கிடையாது. அதேசமயம் 2.5 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்பவர்களுக்கு 5 சதவீதம் வரி கழிக்கப்படலாம். இருப்பினும், அதிகரித்த வாழ்க்கைச் செலவு மற்றும் பணவீக்கம் ஆகியவற்றால், விலக்கு சிறியதாகத் தெரிகிறது. வரி விலக்கு வரம்பு 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும் என்பது இந்த பட்ஜெடில் உள்ள முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.