“அதிமுக-வைக் கட்டுக்குள் கொண்டு வருவேன்; பாஜக-வால் என் நிழலைக்கூட நெருங்க முடியாது” – சசிகலா

சசிகலா தம்பி திவாகரனுக்குச் சொந்தமான கல்லூரி திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள சுந்தரக்கோட்டையில் இருக்கிறது. இன்று இந்தக் கல்லூரியில் `நிறுவனர் நாள்’ விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக சசிகலா கலந்துகொண்டார். திவகாரனின் மகன் ஜெய் ஆனந்த் கல்லூரி நிர்வாக பொறுப்பை ஏற்ற பிறகு நடக்கும் முதல் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் சசிகலாவுக்கு ஆளுயுர மாலை அணிவித்ததுடன் திவாகரனும், ஜெய் ஆனந்தும் சேர்ந்து நினைவு பரிசு வழங்கினர்.

சசிகலா

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன், “சசிகலாவை கல்லூரி விழாவுக்கு அழைத்து வர வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. அது இப்போதுதான் நிகழ்ந்திருக்கிறது. அண்ணன், அக்கா என எங்களுடன் பிறந்தவர்கள் இப்போது யாரும் இல்லை.

நாங்கள் இருவர் மட்டுமே இருக்கிறோம். எங்கள் தாயின் நினைவு நாளில் சசிகலா கல்லூரிக்கு வந்திருக்கிறார். என்னை சிறு வயதில் தாயாக இருந்து கவனித்துக் கொண்டவர் சசிகலா. அவரை எங்கள் கல்லூரில் படிக்கும் பாசமலர்களான மாணவிகளுக்கு, அழைத்து வந்து காட்ட வேண்டும் என நினைத்தேன். அது இப்போது நடந்திருக்கிறது” என்றார்.

சசிகலா, திவாகரன்

பின்னர் சசிகலாவிடம் மாணவிகள் ஒவ்வொருவராக, `கஷ்ட காலங்களை எப்படி எதிர்கொண்டீர்கள்?’, `ஜெயலலிதாவுடன் இருந்த அனுபவம்’ என பல கேள்விகளை எழுப்பினர். அவற்றுக்கு சசிகலா பதிலளித்தார்.

இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, “அ.தி.மு.க-வைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதில் ஸ்டிராங்காக இருக்கிறேன். வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அ.தி.மு.க ஒன்றிணையும். இது நிச்சயம் நடக்கும்.

தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் வீட்டிலிருந்தபடியே மீடியாக்களின் மூலமாக உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நல்ல முடிவு எடுங்கள் என கட்சிக்காரர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இடைத்தேர்தல் வெற்றி என்பது மக்கள் கையில்தான் இருக்கிறது.

கல்லூரி விழாவில் பேசும் சசிகலா

தி.மு.க ஆட்சி குறித்து, போகும் இடங்களிளெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறேன். மீண்டும் மக்கள் முகத்தை பார்க்க வேண்டும் என்பதால் என்ன செய்ய முடியுமோ அதைத்தான் தேர்தல் பிரசாரங்களில் வாக்குறுதியாக கொடுக்க வேண்டும். அதனால் என்ன செய்கிறோமோ, அதைத்தான் ஜெயலலிதா சொல்வார். தி.மு.க-வினர் தேர்தல் பிரசாரத்துக்கு முன்பு பெட்டி வைத்து குறைகளைக் கேட்டனர்.

ஆட்சிக்கு வந்ததும் குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்படும் என்றனர். ஆனால், அந்தப் பெட்டியின் சாவி தற்போது தொலைந்து போய்விட்டது என நினைக்கிறேன். இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அ.தி.மு.க சிதறுண்டு கிடப்பதற்கு அடுத்த கட்சியான பா.ஜ.க-வை குறை சொல்வதற்கு அவசியமே இல்லை. நாம் சரியாக இருந்தால், யாரும் எதுவும் செய்ய முடியாது. தூக்கி வைத்துக் கொள்வதுக்கு யாரும் ஒரு மாதக் குழந்தை கிடையாது.

சசிகலா, திவாகரன்

பா.ஜ.க-வால் என்னையெல்லாம் எதுவும் செய்ய முடியுமா… என் நிழலைக்கூடயாரும் நெருங்க முடியாது. இ.பி.எஸ், ஓ.பி.எஸ் நடவடிக்கை தி.மு.க-வுக்குச் சாதகமாக இருக்கிறது. அதனால் ஒருவரையொருவர் திட்டுவதை நிறுத்திவிட்டு, ஒன்றிணைந்து தீயசக்தியான தி.மு.க-வை வீழ்த்துவதற்கு கைகோக்க வேண்டும். இது என்னுடைய வேண்டுகோள் மட்டுமல்ல, தொண்டர்களுடைய வேண்டுகோளும்கூட” என்றார்.

பின்னர் தஞ்சாவூர் வந்த சசிகலா, மறைந்த அ.தி.மு.க முன்னாள் கொறடா துரை.கோவிந்தராஜன், வேங்கை கணேசன் இல்லங்களுக்குச் சென்று அவர்கள் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.