இளைஞர்களுக்கு உதவித்தொகை.. விண்ணப்பிக்க அழைக்கிறார் ஆட்சியர்..!

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசின் உதவித்தொகைப்பெற விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் சு.அமிர்த ஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதிகளை பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் உதவித்தொகை வழங்கி வருகிறது.

இந்த உதவித்தொகையை பெற விண்ணப்பிப்பவர்கள், தங்கள் விண்ணப்பங்களை சமா்ப்பித்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருப்பதுடன், அதை புதுப்பித்து வருபவராகவும் இருக்க வேண்டும். மேலும், 40 வயதுக்கு உட்பட்டவராகவும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 45 வயதுக்கு மிகாதவராகவும், எந்த வேலைக்கும் செல்லாத, குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

இந்த தகுதியுடையவர்கள் கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தையும், மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் கிண்டியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தையும் தொடர்பு கொண்டு விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ளலாம்.

ஏற்கனவே உதவித் தொகை பெற்று வரும், ஓராண்டு முடிவு பெற்றவர்கள் சுய உறுதிமொழி ஆவணத்துடன், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண், உதவித்தொகை எண், வங்கி புத்தகம் நகல் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களுடன் நேரில் சமர்ப்பிக்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.