உளவு அமைப்புகளின் அறிக்கைகளை உச்ச நீதிமன்ற கொலீஜியம் வெளியிட்டது கவலை அளிக்கிறது: கிரண் ரிஜிஜு

புதுடெல்லி: உளவு அமைப்புகளின் அறிக்கைகளை உச்ச நீதிமன்ற கொலீஜியம் வெளியிட்டது மிகவும் கவலைக்குரிய விஷயம் என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கக் கோரி உச்ச நீதிமன்ற கொலீஜியம் அளித்த பரிந்துரைகளில் சில பெயர்களை மத்திய அரசு நிராகரித்தது. மீண்டும் அதே பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதை அடுத்து, அந்தப் பெயர்கள் ஏன் நிராகரிக்கப்பட்டன என்பதற்கான ஐபி, ரா ஆகிய உளவு அமைப்புகள் கொடுத்த அறிக்கைகள் கொலீஜியத்திடம் பகிர்ந்துகொள்ளப்பட்டன.

இந்நிலையில், கொலீஜியம் கடந்த வாரம் வெளியிட்ட தனது தீர்மானத்தில் இந்த அறிக்கைகளின் பகுதிகளை குறிப்பிட்டுள்ளது. இதன்மூலம், ஐபி மற்றும் ராவின் அறிக்கையின் பகுதி பொதுவெளிக்கு வந்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, ”ஐபி, ரா ஆகிய உளவு அமைப்புகளின் ரகசிய அறிக்கைகளை உச்ச நீதிமன்ற கொலீஜியம் பொதுவெளியில் பகிர்ந்தது கவலை அளிக்கிறது. இது மிகப் பெரிய கவலை அளிக்கக் கூடிய விஷயம்.

ஐபி மற்றும் ராவில் பணிபுரிபவர்கள் நாட்டுக்காக உளவுப் பணிகளை மேற்கொள்கிறார்கள். அரசுக்கு தாங்கள் அளிக்கும் அறிக்கை எதிர்காலத்தில் வெளியாகும் என தெரிந்தால் அவர்கள் அறிக்கை அளிக்கும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பார்கள். சரியான நேரத்தில் இது தொடர்பாக விரிவான பதிலை அளிப்பேன்” என தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.