புதுடெல்லி: கர்நாடகாவில் ஹிஜாப் தடை விதிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட அமர்வை அமைக்க பரிசீலிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய அம்மாநில பாஜக அரசு கடந்த ஆண்டு தடை விதித்தது. இதற்கு எதிரான வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் அரசின் உத்தரவை உறுதி செய்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. மேலும் இவ்வழக்கை விசாரிக்க கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வை அமைக்குமாறு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தது.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியன், ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வுஇவ்வழக்கை நேற்று விசாரித்தது.
அப்போது முஸ்லிம் மாணவிகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மீனாட்சி அரோரா, ‘‘ஹிஜாப் விவகாரத்தால் மாணவிகள் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் மாணவிகள் மத்தியில் இடை நிற்றல் அதிகரித்துள்ளது. வரும் பிப்ரவரி 6-ம் தேதி முதல் கர்நாடகாவில் 12-ம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெற உள்ளன. எனவே இவ்வழக்கில் இடைக்கால உத்தரவு தேவை. எனவே வழக்கைவிரைந்து விசாரித்து உரிய தீர்ப்பைவழங்க வேண்டும்” என வாதிட்டார்.
இதையடுத்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “மாணவிகள் தரப்பிலான கோரிக்கையை பரிசீலிக்கிறேன். இவ்வழக்கை விரைந்து விசாரிக்க 3 நீதிபதிகள் அடங்கியஅமர்வை அமைக்க பரிசீலிக்கிறேன். இது தொடர்பாக விரைவில் தேதி ஒதுக்கி, விசாரிக்கப்படும்’’ என்றார்.