கோவை மாவட்டத்தில் குளிர்பானம் என நினைத்து கருப்பான் பூச்சி மருந்தை குடித்த 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சீரநாயக்கன்பாளையம் திலகர் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகன் தர்ஷித் (5). இந்நிலையில் சம்பவத்தன்று சிறுவனை அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் விட்டு விட்டு பெற்றோர் வேலைக்கு சென்றுள்ளனர்.
இதையடுத்து சிறுவன் மதியம் அங்கன்வாடி மையத்திலிருந்து உறவினர் வீட்டிற்கு விளையாட சென்றுள்ளான். அப்பொழுது அங்கு குளிர்பான பாட்டிலில் கரப்பான் பூச்சி மருந்தை கலந்து வைத்திருந்ததை சிறுவன் ஜூஸ் என நினைத்து குடித்துள்ளான்.
இதையடுத்து மாலை வீட்டிற்கு வந்த சிறுவனுக்கு பெற்றோர் உணவு கொடுத்துள்ளனர். அப்பொழுது திடீரென சிறுவனுக்கு வயிற்று வலி ஏற்பட்டு அலறி துடித்துள்ளான். இந்நிலையில் சிறுவனிடம் இதுகுறித்து கேட்டபோது, தெரியாமல் கருப்பான் பூச்சி மருந்தை குடித்தது தெரிய வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து உடனடியாக சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக சிறுவன் உயிரிழந்துள்ளான். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.