Tamil Nadu News: சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி வளாகத்தில், வணிகவரி இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் துறையின் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மூர்த்தி, “370 கோடியாக இருந்த வணிக வரி வருவாய், தற்போது ரூ. 1,666 கோடியாக உயர்ந்துள்ளது. வரி வருவாயை உயர்த்தும் வகையில் ஜிஎஸ்டி வரம்பிற்குள் அதிகமானோர் கொண்டுவரப்பட்டு உள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் ஜிஎஸ்டி வரம்புக்குள் புதிதாக கொண்டுவரப்பட்டு உள்ளனர் எனத் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் தொடர்ந்து பேசிய அவர், கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் கிடைத்த அளவு தமிழக அரசின் வரிவருவாய் முதலமைச்சர் நடவடிக்கையால் இந்த ஆண்டில் ஜனவரி 24 க்குள் வரப்பெற்றுள்ளது. வணிக வரித்துறையில் 1லட்சத்து 459 கோடி வருவாய், பதிவுத்துறை மூலம் 13 ஆயிரத்து 639 கோடி வருவாய் என இரு துறைகள் மூலம் 1லட்சத்து 17 ஆயிரத்து 690 கோடி வருவாய் கடந்த ஆண்டில் ஈட்டப்பட்டுள்ளது.
புதிய தொழிற்சாலை, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் அரசின் வரி வருவாய் உயர நடவடிக்கை எடுக்கப்படுகிறது, நிலுவையில் உள்ள வரிகளை அதிகாரிகள் மூலம் பெற்று வறுகிறோம். இதுவரை 2ஆயிரம் போலிப் பத்திரங்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலிப் பத்திரப் பதிவு தொடர்பாக புகார் மனு பெறப்பட்டால் 60 நாளுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.
வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரி ஏய்ப்பு தொடர்பாக 366 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது . வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படுகிறது. அவர்கள் மீண்டும் தொழில் செய்ய முடியாத சூழல் ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
வாட்டாட்சியர் அலுவலகத்திலேயே பட்டா மாறுதல் செய்யும் நடைமுறை சோதனை அடிப்படையில் தற்போது மதுரை மாவட்டத்தில் மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது என செய்தியாளர்கள் மத்தியில் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கூறினார்.
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அளித்த பேட்டியின் சிறப்பம்சம்:
“வணிக வரி மற்றும் பதிவுத்துறையில் கடந்த ஆண்டில் 1லட்சத்து 17 ஆயிரத்து 690 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. அரசின் வரி வருவாயை உயர்த்தும் வகையில் ஜிஎஸ்டி வரம்புக்குள் அதிகமானோர் கொண்டுவரப்பட்டுள்ளனர்.”
“வரி ஏய்ப்பில் ஈடுபடும் நிறுவனங்களின் தொழில் உரிமம் பறிக்கப்பட்டு , மீண்டும் அவர்கள் வணிகத்தில் ஈடுபட முடியாத சூழல் ஏற்படுத்தப்படும்.”
“போலி பத்திரப் பதிவுகள் குறித்து புகார் வந்த 60 நாளுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். 2ஆயிரம் போலிப் பத்திரங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.”