'நீதித்துறையை கைப்பற்ற மத்திய அரசு விரும்புகிறது!' – அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!

“நீதித் துறையை கைப்பற்ற மத்திய பாஜக அரசு விரும்புகிறது,” என, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கும் – நீதித் துறைக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. “நீதித் துறையில் கொலிஜியம் முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை. அந்த முறையை மாற்றி வேண்டும். நீதிபதிகளை நியமிப்பது மத்திய அரசின் வேலை,” என்று, மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்து இருந்தார்.

இதற்கிடையே, நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, “நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. அவர்கள் மக்களின் கண்காணிப்பை எதிர்கொள்வதில்லை. நீதிபதிகளையும், அவர்கள் வழங்கும் தீர்ப்புகளையும், அவர்களின் மதிப்பீடுகளையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்,” என பேசி இருந்தார். இதன் மூலம், நீதித் துறை – மத்திய பாஜக அரசு இடையேயான மோதல் போக்கு வெளிச்சத்திற்கு வந்தது.

இந்நிலையில், “நீதித் துறை குறித்து மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்த கருத்துகள் தவறானவை,” என, ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைதளமான ட்விட்டரில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள பதிவில், “நாட்டில் உள்ள தேசிய சுதந்திரமான அமைப்புகள் அனைத்தையும் சட்ட விரோதமாக ஆக்கிரமித்த பின் தற்போது மத்திய பாஜக அரசு நீதித் துறையை கைப்பற்ற நினைக்கிறது. மக்கள் அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். நீதித் துறை மீதான இத்தகைய தாக்குதல்கள் சரியல்ல,” என, குறிப்பிட்டு உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.