அந்த மனசு இருக்கே… பிக்பாஸில் ஜெய்த்த பணத்தை தானம் கொடுத்த அசீம்

Biggboss Season 6 Winner Azeem: தனியார் தமிழ் தொலைக்காட்சியில் கடந்த அக். 9ஆம் தேதி தொடங்கிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, ஜன. 22ஆம் தேதி நிறைவுப்பெற்றது. 106 நாள்கள் நடைபெற்ற இப்போட்டியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் பங்கேற்றனர். ஷிவின், விக்ரமன், அசீம் ஆகியோர் இறுதி மூன்று இடத்திற்கு போட்டியிட்ட நிலையில், அசீம் இந்த சீசனின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். விக்ரமன் இரண்டாவது இடத்தையும், ஷிவின் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். 

வழக்கம்போல், மக்களின் வாக்குகளின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. தொடர்ந்து, வெற்றியாளர் அசீமிற்கு பரிசுத்தொகையாக 50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இந்த தொடரையும், நடிகர் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கினார். 

இதில், அசீம் மீது பல குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டாலும், மக்களின் ஆதரவு அவருக்கு அமோகமாக இருந்துள்ளது என்பதை அவரின் வெற்றியே அறிவித்துள்ளதாக இணையத்தில் அவரின் ரசிகர்கள், ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அசீமின் வெற்றியை பலரும் கொண்டாடினர். 

இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னரான அசீம், தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்து பாதிக்கப்பட்டுள்ள மாணவ மாணவியிருக்கு தனது பரிசுத்தொகையில் இருந்து பாதி, அதாவது 25 லட்ச ரூபாயை அவர்களின் கல்விச்செலவுக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளார். முன்னதாக, தான் பிக்பாஸில் வெற்றி பெற்றால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தனது பரிசுத்தொகையில் பாதியை அளிப்பதாக அவர் தெரிவித்திருந்தார். 

அதை தொடர்ந்து, இந்த அறிவிப்பை அவர் தற்போது வெளியிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில்,”நான் கூறியது போலவே, என பரிசுத்தொகையின் பாதியான 25 லட்ச ரூபாயை, கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விக்கு கொடுக்க உள்ளேன். 

நீங்கள் எனக்குக் கொடுத்த அன்பை சமூகத்திற்குத் திருப்பிக் கொடுப்பதில், இது எனது ஆரம்ப கட்ட பணியாகும். என்றென்றும் நான் உங்கள் அனைவருக்கும் நன்றியுள்ளவனாக இருப்பேன்” என குறிப்பிட்டுள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.