குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, பெருமாள் புரம், தோவாளை, மாதவலாயம் பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதுகுறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது. தனிப்படை போலீசார் அந்தப் பகுதி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வந்தனர்.
இந்தநிலையில், அம்பாசமுத்திரம் பகுதியில் நடந்த திருட்டு சம்பந்தமாக நாமக்கல் விடுதியில் இருந்த ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர் ஆரல்வாய்மொழி பகுதியில் பல இடங்களில் கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது. மேலும் அவரது பெயர் சுடலைப்பழம் (48) என்பதும், குமரி மாவட்டம் அகத்தீஸ்வரம் அருகே உள்ள முகிலன் குடியிருப்பைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
கைதான சுடலைப் பழத்திடம் போலீசார் விசாரித்த போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. தனக்கு நிறைய இடங்களில் பெண் நண்பர்கள் இருப்பதாகவும், அவர்கள் அளிக்கின்ற தகவல் அடிப்படையில்தான் திருட்டில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளார். பகலில் ஒரு இடத்திற்கு சென்றால், அங்கு கொள்ளையடிக்க வேண்டிய வீட்டை முதலில் நோட்டமிடுவேன். நள்ளிரவு வரை பஸ் நிறுத்தத்திலேயே தங்கி விட்டு அதிகாலை 3 மணிக்கு மேல் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவேன் என்று சுடலைப்பழம் கூறியுள்ளார்.
திருடிய பணத்தைக் கொண்டு சென்னை, கேரளா, ஹைதராபாத் போன்ற இடங்களுக்குச் சென்று உயர்தர விடுதியில் தங்கி துணை நடிகைகளோடு உல்லாசமாக இருந்ததாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். விசாரணைக்கு பின்பு சுடலைப்பழம், பூதப்பாண்டி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.