மும்பை: விதிமுறைகளை மீறி வேறொரு நிறுவனத்தில் ரூ.3,535 கோடி முதலீடு செய்த விவகாரத்தில் ‘காஃபி டே’ எண்டர்பிரைசஸ் நிறுவனவத்திற்கு ரூ. 26 கோடி அபராதம் விதித்து சிபி உத்தரவிட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பிரபல ‘காஃபி டே’ எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவர் வி.ஜி.சித்தார்த்தா கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, அவரது நிறுவனத்தின் இயக்குநர் குழு மற்றும் காபி டே நிறுவனத்தின் உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதத்தையும் (தற்கொலைக் குறிப்பு) போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அவருக்கு பல கோடி ரூபாய் கடன் இருந்ததும், அதனால் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இவ்விவகாரம் தொடர்பாக பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ முழு தணிக்கை செய்தது.
இதுகுறித்து தற்போது ‘செபி’ வெளியிட்டுள்ள 43 பக்க உத்தரவில், ‘காபி டே எண்டர்பிரைசஸ் நிறுவனம் அதன் துணை நிறுவனங்களின் முதலீடு பணத்தை வேறொரு பங்குதாரருடன் தொடர்புடைய ஒரு நிறுவனத்தில் விதிமுறைகளை மீறி சுமார் ரூ .3,535 கோடி முதலீடு செய்துள்ளது. அதனால் காபி டே எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு ரூ.26 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத் தொகையை 45 நாட்களுக்குள் டெபாசிட் செய்ய வேண்டும். மேலும், விதிமுறைகளை மீறி முதலீடு செய்யப்பட்ட பணத்தை வட்டியுடன் திரும்ப பெற வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.