2012-ல் பள்ளிப் பேருந்து ஓட்டை வழியே விழுந்து சிறுமி ஸ்ருதி உயிரிழந்த வழக்கு: 8 பேரும் விடுதலை

சென்னை: கடந்த 2012-ம் ஆண்டு தனியார் பள்ளிப் பேருந்தின் ஓட்டை வழியே விழுந்து சிறுமி ஸ்ருதி உயிரிழந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்து செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு தாம்பரத்தை அடுத்த சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் சிறுமி ஸ்ருதி 2-ம் வகுப்பு படித்து வந்தார். அந்தப் பள்ளிக்குச் சொந்தமான பேருந்தில் சிறுமி ஸ்ருதி தினந்தோறும் பள்ளி சென்றுவந்தார். இந்நிலையில், 2012-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி, பள்ளி முடிந்து மாணவி ஸ்ருதி பள்ளி பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அந்தப் பேருந்தில் இருந்த ஓட்டை வழியே சிறுமி ஸ்ருதி கீழே சாலையில் விழுந்தார். அப்போது பள்ளிப் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி ஸ்ருதி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், தனியார் பள்ளியின் தாளாளர், மோட்டார் வாகன ஆய்வாளர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கு செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி காயத்ரி, 2012-ம் ஆண்டு தனியார் பள்ளிப் பேருந்து ஓட்டை வழியே சிறுமி விழுந்து பலியான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.