சிவகாசி கண்மாயில் நீர்மட்டம் குறைந்ததால் பரிசலில் சென்று மீன் பிடிப்பு: விரால், கெண்டையை அள்ளும் பொதுமக்கள்

சிவகாசி: சிவகாசியில் உள்ள பெரியகுளம் கண்மாயில், நீர்மட்டம் குறைந்ததால், பொதுமக்கள் பரிசலில் சென்று மீன்பிடித்து வருகின்றனர். சிவகாசியில் உள்ள பெரியகுளம் கண்மாய், கடந்த பல ஆண்டுகளாக நீர்வரத்து இல்லாமல் வறண்டு கிடந்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையால், கண்மாயில் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால், மாநகராட்சி பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்தது. இந்நிலையில், பெரியகுளம் கண்மாய்க்கு தண்ணீர் வரும் நீர்வரத்து கால்வாயை தூர்வார மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

கண்மாயில் மியாவாக்கி காடுகள் உருவாக்கும் திட்டத்தில் பல ஆயிரம் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. பெரியகுளம் கண்மாயை பாதுகாக்க சமூக ஆர்வலர்களும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நகரின் மையப் பகுதியில் உள்ள இந்த கண்மாய் நிலத்தடி நீர் மட்டத்திற்கு ஆதாரமாக உள்ளது. இந்நிலையில், கண்மாயில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால், பொதுமக்கள் பரிசலில் சென்று விரால், கெண்டை, பாறை வகை மீன்களை பிடித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.