விஜய்யுடன் சேர்ந்து தான் வாரிசு படம் பார்த்தேன் ; எஸ்.ஏ.சந்திரசேகர்

நடிகர் விஜய்யை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தி அவருக்கு முன்னணி நடிகர் என்கிற நட்சத்திர அந்தஸ்தை பெற்று தரும் அளவிற்கு பின்னணியில் இருந்து கடுமையாக உழைத்தவர் அவரது தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். ஒரு கட்டத்தில் விஜய்யின் மார்க்கெட் பெரிய அளவில் உயர்ந்து அவருக்கான ரசிகர் வட்டம் அதிகரித்த நிலையில் அவருக்குள் அரசியல் ஆசையை தூண்டிவிட்டவரும் அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் தான்.

அதேசமயம் விஜய்யும் அரசியல் குறித்த தனது ஆர்வத்தை அவ்வப்போது தனது படங்கள் மூலமாகவும் சில மேடைப்பேச்சுகள் மூலமாகவும் வெளிப்படுத்தி வந்தாலும் கூட அரசியலில் நுழைவதற்கு இப்போதுவரை நிதானம் காட்டி வருகிறார். ஆனால் அவரது தந்தையோ விஜய்யின் அரசியல் பிரவேசத்தை விரைவிலேயே துவக்க வேண்டும் என விஜய் பெயரிலேயே தனியாக கட்சி துவங்கும் அளவிற்கு சென்றார். இதனால் தந்தையின் நடவடிக்கை பிடிக்காமல் அவரிடம் இருந்து விஜய் ஒதுங்கி விட்டார் என்றும் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு மனக்கசப்பு இருக்கின்றது என்றும் சொல்லப்பட்டு வருகிறது.

வாரிசு பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட தனது தாய் தந்தையரிடம் கூட யாரோ மூன்றாவது நபர் போல விஜய் நடந்து கொண்ட நிகழ்வு பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் கூறும்போது, “தனக்கும் விஜய்க்கும்மான உறவில் எந்தவித விரிசலும் இல்லை என்றும் ஒன்றரை வருடத்திற்கு முன்னால் ஏற்பட்ட ஒரு சின்ன பிரச்சனையை நெட்டிசன்களும் மீடியாக்களும் சில காரணங்களுக்காக ஊதி பெரிதாக்கி விட்டனர் என்றும் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்ல சமீபத்தில் வெளியான விஜய்யின் வாரிசு படத்தை கூட இருவரும் சேர்ந்தே தான் பார்த்தோம் என்று கூறியுள்ள எஸ்.ஏ.சந்திரசேகர், எப்போதுமே விஜய்யும் நானும் அன்பை ரொம்பவும் வெளிப்படையாக காட்டிக்கொள்ள மாட்டோம்.. அதேபோல அடிக்கடி பேசிக்கொள்ளவும் மாட்டோம். ஆனால் எங்கள் அன்பு எப்போதுமே உறுதியானது என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.