தந்தை கண்டித்த காரணத்தால் ஒரு மகன் உயிரிழந்த சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பிலிமிசை எனும் கிராமத்தில் செந்தில்குமார் என்ற 45 வயதான நபர் விவசாய தொழில் செய்து வருகின்றார். இவர் தனது குடும்பத்துடன் பிலிமிசை கிராமத்தில் வசித்து வந்த நிலையில், இவருக்கு ஆகாஷ் என்ற ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகன் ஒருவன் இருந்துள்ளார்.
மூத்த மகனான ஆகாஷ் அருகில் இருக்கும் கூத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவர் சரிவர பள்ளிக்கு போகவில்லை என்று செந்தில்குமார் தன்னுடைய மகனை கடுமையாக கண்டித்துள்ளார்.
இதன் காரணமாக, ஆகாஷ் மன உளைச்சலில் காணப்பட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் விரக்தியின் உச்சிக்கு சென்ற ஆகாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒன்பதாம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.