உலகப் பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் கௌதம் அதானி. இவர் 1988-ம் ஆண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத்தை தலைமையிடமாக கொண்டு பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்நிலையில், அதானி குழுமம் பங்குச் சந்தை முறைகேட்டில் ஈடுபட்டதாக அமெரிக்க சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுகுறித்து ஹிண்டன்பர்க் ரிசர்ச் கடந்த புதன்கிழமை ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அதானி குழுமத்தைச் சேர்ந்த 7 முக்கிய நிறுவனங்கள் தங்களது நிதிநிலையை உண்மைக்குப் புறம்பான முறையில் வலுவாகக் காட்டுவது, ஏராளமான தொகை கடன் வாங்கி அதனை மறைப்பது போன்ற முறைகேடான நடவடிக்கைகள் மூலம் பங்குச் சந்தையை ஏமாற்றி லாபம் பார்த்தன. மேலும், வெளிநாடுகளில் ஷெல் நிறுவனங்களை உருவாக்கி அவற்றின் மூலம் சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளது. மேலும், இது போன்ற பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த அறிக்கை குறித்து அதானி குழுமம் சார்பில் கடந்த வியாழக்கிழமை அன்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், தவறான குறிக்கோளுடன் போதிய ஆய்வு செய்யாமல் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அதானி குழுமம் எச்சரித்திருந்தது.
இந்நிலையில், அதானி குழுமத்திற்கு எதிரான அறிக்கையால், புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரண்டே நாள்களில் அதானி குழும நிறுவனப் பங்குகளின் விலை ரூ.4.17 லட்சம் கோடி வீழ்ச்சியடைந்தது. மேலும், இதன்மூலம், ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியாவதற்கு முன் உலகின் 3-வது பெரிய பணக்காரராக இருந்த அவர், தற்போது 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.