கலைஞருக்கு பேனா நினைவு சின்னம் கடலில் வைப்பது சரியா? சீமான் கேட்ட 7 கேள்விகள்!

சென்னை மெரினாவில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தை ஒட்டி வங்கக் கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான கருத்து கேட்பு கூட்டம் கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்
சீமான்
தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

சீமான் கடும் எதிர்ப்பு

இதையடுத்து தங்கள் எதிர்ப்பு கடிதத்தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி விட்டு வெளியே வந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி அதில் எதிர் கருத்துகள் வருவதை ஏற்காமல் கூச்சலிடுவது அநாகரிகம். அதுக்கு இதை கருத்து கேட்பு கூட்டம் என்று பெயர் வைக்க வேண்டாம்.

கடலில் வேண்டாம்

கட்சி கூட்டம் என்று பெயர் வைத்து விடலாம். இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன். ஐயா கலைஞர் அவர்களுக்கு பேனா நினைவு சின்னம் வைப்பதை எதிர்க்கவில்லை. நாங்கள் ஏற்கிறோம். ஆனால் அதை கடலுக்குள் வைப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். எதிர்க்கிறோம்.

ஏழு கேள்விகள்

இந்த சின்னம் அமைக்க கடலுக்குள் கிட்டத்தட்ட அரை ஏக்கரை எடுக்கிறார்கள். அந்த இடத்தில் கல்லை கொட்டி, மண்ணை கொட்டி அதன் மேல் பேனா சின்னத்தை அமைப்பர். அதை பார்வையிட செல்லும் மக்கள் எதையாவது தின்றுவிட்டு போடுவார்கள். நெகிழியை போடுவர். பாலித்தீனை போடுவர். தண்ணீர் பாட்டிலை தூக்கி போடுவர். இப்படி ஒரு சீரழிவு தேவையா?ஏற்கனவே நம்முடைய இந்திய நிலப்பரப்பு அளவிற்கு கடலுக்குள் குப்பைகள் இருப்பதாக கூறுகின்றனர். கடல் வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்கும் போது, அதை கிழித்து பார்த்தால் வயிற்றில் பிளாஸ்டிக் தான் இருக்கிறது. இப்படி ஒரு சூழலில் பேனா சின்னம் வைப்பது மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தாதா?பேனா நினைவு சின்னம் வைக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. கலைஞரின் நினைவிடம் இருக்கு. நினைவு மண்டபம் கட்டுங்க. அங்கு வையுங்கள். அண்ணா அறிவாலயத்தில் வையுங்கள். யார் எதிர்க்க போகிறார்கள்?எழுதாத பேனாவிற்கு சிலை. அது பகுத்தறிவு. எழுதுகிற பேனாவை ஆயுத பூஜை அன்றைக்கு வைத்து கும்பிட்டால் அது மூட நம்பிக்கை. இதுதான் உங்கள் சித்தாந்தமா?அந்த பேனா என்ன ஐயா கலைஞர் எழுதின பேனாவா?நீங்கள் பள்ளிக்கூடத்தை சீரமைக்க பணம் இல்லை. மக்களே நிதி தாருங்கள் என்று கேட்கிறீர்கள். அப்ப இந்த பேனா வைக்க எங்கிருந்து காசு வருகிறது. அதுவும் 81 கோடி ருபாய்?முதியோர்களுக்கு ஊக்கத்தொகை கொடுக்க காசு இல்லை. ஓய்வூதியம் கொடுக்க காசு இல்லை. இதற்காக தான் ஓய்வு பெறும் வயதை 58 ஆக்கினீர்கள். 59 ஆக்கினீர்கள். இப்போது 60 ஆக்கிவீட்டீர்கள். எல்லாரையும் நிரந்தர பணியாளர்களாக எடுக்காமல் ஒப்பந்த பணியாளர்களாக எடுக்க இதுதான் காரணம். நிதி இல்லை நிதி இல்லை என்று கூறிவிட்டு இதுக்கு மட்டும் எப்படி பணம் வருகிறது?

வள்ளுவர் சிலையை கடலில் வைத்தார்கள் என்றால் அது ஏற்கனவே இருந்த பாறை. அதன் மீது கட்டமைத்து விட்டார்கள். இது அப்படி அல்ல. கடலை தோண்டி அதை நிரப்ப வேண்டும். இந்த விஷயத்தை பற்றி எந்த சூழலியல் வல்லுநரிடம் கேட்டாலும் வேண்டாம் என்று தான் சொல்வார்கள் என்று சீமான் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.