குட்கா விற்பனை: உயர் நீதிமன்ற உத்தரவும் நடைமுறை குழப்பங்களும்!

2006-ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருள்களுக்கு தடை விதித்து உணவுப் பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். ஆண்டுதோறும் இது தொடர்பான அறிவிப்பாணைகளும் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. இந்த உத்தரவை மீறியதாக சில நிறுவனங்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இதனால், அரசின் அறிவிப்பாணையை எதிர்த்தும், குற்ற நடவடிக்கையை எதிர்த்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அதேபோல, தடையை மீறியதாக ஒரு நிறுவனத்துக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்தும் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் மேல் முறையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், உணவின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதற்காக கொண்டு வரப்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தில் புகையிலையை உணவுப் பொருளாக சுட்டிக்காட்டவில்லை. சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருள்கள் விளம்பரப்படுத்த தடை மற்றும் விநியோக முறைப்படுத்தல் சட்டத்தில் புகையிலைப் பொருள்களை விளம்பரப்படுத்துவதை முறைப்படுத்துவதைப் பற்றியே தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்

புகையிலைப் பொருள்களுக்கு முழு தடை விதிக்க இந்த இரு சட்டங்களும் வழிவகை செய்யவில்லை. தடை விதிக்கும் அதிகாரத்தையும் வழங்கவில்லை. குறிப்பிட்ட வழக்குகளில் நீதிபதிகள், உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் அவசர நிலை கருதி தற்காலிகமாக தடை செய்ய மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, உணவு பாதுகாப்பு ஆணையர் தனது அதிகாரத்தை மீறி, புகையிலைப் பொருள்களுக்கு தடை விதித்து, அவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர். இந்த அறிவிப்பாணையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகளையும் ரத்து செய்வதாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா இந்த விவகாரம் குறித்து பேசுகையில், “நீதிமன்றம் புகையிலை உணவு பாதுகாப்பு சட்டத்தில் சேர்க்க முடியாது என தெரிவித்துள்ள நிலையில் இது குறித்து வணிகர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு முடிவு அறிவிக்கும் வரை வணிகர்கள் புகையிலை பொருள்களை விற்பனை செய்யக்கூடாது. புகையிலை விற்பனை தொடர்பாக வணிகர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்” என்றார்.

புகையிலைப் பொருள்களுக்கு தடைவிதித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடைவிதித்த உணவு பாதுகாப்பு ஆணையரின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது.

அமைச்சர் மா.சுப்ரமணியன்

அதாவது, உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கு தடைவிதித்த உணவு பாதுகாப்பு ஆணையரின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம், 2006ன் பிரிவு 30(2)(a)ன் கீழ் தமிழ்நாட்டில் குட்கா, பான்மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடைவிதித்து, உணவு பாதுகாப்புத் துறை ஆணையரால் ஆண்டுதோறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல்வர் அறிவுறுத்தலின் பேரில் குட்கா, பான்மசாலா விற்பனையாளர்கள், மொத்த வியாபாரிகள் மீது நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இது சம்பந்தமாக அறிவிப்பாணைகள் வெளியிடப்பட்டு, இந்த உத்தரவை மீறிய நிறுவனங்களுக்கு எதிராக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த சட்ட நடவடிக்கையை எதிர்த்து பல நிறுவனங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

முதல்வர் ஸ்டாலின்

தற்போது, இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு அதனுடைய தீர்ப்பில், உணவின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதற்காக கொண்டு வரப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டத்தில் புகையிலையை உணவுப் பொருளாக சுட்டிக் காட்டியுள்ளது.

மேலும், சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருள்கள் விளம்பரப்படுத்த தடை மற்றும் விநியோக முறைப்படுத்துதல் சட்டத்தில், புகையிலைப் பொருட்களை விளம்பரப் படுத்துவதையும், முறைப்படுத்துவதைப் பற்றியும் தான் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால், புகையிலைப் பொருள்களுக்கு முழு தடை விதிக்க இரு சட்டங்களும் வழிவகை செய்யவில்லை என்னும் கருத்து தெரிவித்துள்ளது. உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்றம் தற்போது ரத்து செய்துள்ளது. எனினும், அதே தீர்ப்பில் புகையிலை உணவுப் பொருளாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி உணவு பாதுகாப்பு ஆணையர்கள் இந்த விதிமுறையின் கீழ்தான் தடை உத்தரவை பிறப்பித்து வருகின்றனர்.

இந்தியா முழுவதும் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குட்கா, பான்மசாலா மற்றும் மெல்லும் புகையிலை ஆகியவை இந்தியாவிலும் தமிழகத்திலும் வாய் புற்றுநோய்க்கான முதன்மை காரணம் ஆகும். உச்ச நீதிமன்ற சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, அரசு உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் தடையின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக தற்போதுள்ள சட்டம், விதிகளில் திருத்தம் செய்யலாமா அல்லது புதிய சட்டத்தை இயற்றுவதா என்பதையும் சட்ட வல்லுநர்களுடன் ஆய்வு செய்து வருகிறது. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குட்கா, பான் மசாலா மற்றும் மெல்லும் புகையிலை ஆகியவை இந்தியாவிலும் தமிழகத்திலும் வாய் புற்றுநோய்க்கான முதன்மை காரணம் ஆகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

உணவு பாதுகாப்பு ஆணையம்

இது தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சிலரை தொடர்புக் கொண்டோம். ‘எங்கள் பெயரும், புகைப்படமும் பகிர வேண்டாம் என்கிற நிபந்தனையோடு பேசியவர்கள்’, “இது பற்றி முழு விவரமும், அதிகாரப்பூர்வமாக எங்களுக்கு இன்னும் ஏதும் தெளிவுப்படுத்தவில்லை. அமைச்சர் மேல்முறையீடு போகலாம் என்று சொல்லி இருக்கிறார். இப்போதுவரை உயர் அதிகாரிகளிடமிருந்து எந்த ஒரு ஆணையும் வரவில்லை. நீதிமன்றத்தின் தீர்ப்பு மதிக்கிறோம். ஆனால், தீர்ப்பு தழுவி அறிவுத்தல் பொதுவாக மேலிடத்திலிருந்து கொடுப்பார்கள். நாங்களும் அதற்காகத்தான் காத்திருக்கிறோம். ஏன் தாமதம் என்பது தெரியவில்லை” என்றார்கள்.

அவர்கள் குறிப்பிட்டது போல் உயரதிகாரியான, உணவு பாதுகாப்புத்துறை கூடுதல் ஆணையர் தேவ்பார்த்தசாரதியை தொடர்பு கொண்ட போது, “மருத்துவத்துறை அமைச்சர் தெளிவாக அறிக்கை கொடுத்திருக்கிறார்” என்றார் சுருக்கமாக.

இதனுடைய இன்று குட்கா விவகாரம் தொடர்பாக பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “குட்கா மீதான தடையை நீதிமன்றம் நீக்கியுள்ளது. ஆனால் தமிழ்நாடு அரசு போதை பொருளை மாநிலத்திலிருந்து முழுமையாக ஒழிப்பதிலேயே குறிக்கோளாக உள்ளது. வியாபாரிகள் கடைகளில் குட்கா விற்க வேண்டாம் என வேண்டுகோள் விடுகிறேன். குட்கா மீது தடை விதிக்க மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், தமிழக சட்டசபையில் தனி தீர்மானமும் கொண்டுவரப்படும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.