சாஹோ டைரக்டருடன் கைகோர்த்த பவன் கல்யாண்

பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களின் அடுத்தடுத்த வெற்றியை தொடர்ந்து இந்தியா முழுமைக்கும் அறியப்படும் நடிகராக மாறிவிட்டார் பிரபாஸ். அதைத்தொடர்ந்து, அடுத்ததாக அவர் நடித்த சாஹோ திரைப்படத்தின் மீது எல்லோருக்குமே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆக்சன் படமாக உருவான இந்த படத்தை சுஜித் என்பவர் இயக்கியிருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த படம் தோல்வியை தழுவி பிரபாஸுக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. குறிப்பாக படத்தின் இயக்குனரான சுஜித் பிரபாஸின் திறமையையும் புகழையும் சரியாக பயன்படுத்த தவறிவிட்டார் என்று விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் நான்கு ஆண்டுகளாக படம் எதுவும் இயக்காமல் இருந்த சுஜித், தற்போது தெலுங்கு சினிமாவின் இன்னொரு முன்னணி நடிகரான பவன் கல்யாண் படத்தை இயக்குகிறார். இதற்கான துவக்க விழா பூஜை நேற்று நடைபெற்றது. டிவி தானய்யா பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார் என்பது மட்டுமே இப்போதைக்கு உறுதியாகி உள்ளது.

இந்த படத்தில் நடிக்கும் கதாநாயகி உள்ளிட்ட மற்ற நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக இயக்குனர் கிரிஷ் டைரக்ஷனில் நான் நடித்து வந்த ஹரிஹர வீர மல்லு படத்தை சமீபத்தில் தான் பவன் கல்யாண் முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.