இரான்: பொது இடத்தில் நடனமாடிய இளம் ஜோடிக்கு 10 ஆண்டுகள் சிறை!

இரானின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான ஆசாதி டவர் முன்பு நடமானடிய இளம் காதல் ஜோடிக்கு, 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இரானில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள், கட்டுப்பாடுகள் அதிகளவில் உள்ளன. கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என்பது உள்ளிட்ட இந்த தடைகளை எதிர்த்து அங்குள்ள பெண்கள், சமூக நல ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரானிய பெண்களின் போராட்டம் உலகளவில் கவனம் பெற்று பலரின் ஆதரவை பெற்று வருகிறது.

இரான் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்

இந்த நிலையில், இரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஆசாதி டவர் முன்பு நடனமாடியதற்காக, இளம் ஜோடிகளுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தெஹ்ரானில் உள்ள நினைவு சின்னமான ஆசாதி கோபுரம் முன்பு, அஸ்தியாஜ் ஹகிகி மற்றும் அவரது வருங்கால கணவர் அமீர் முகமது அஹ்மதி இருவரும் நடமாடியுள்ளனர். அப்போது ஹகிகி தலையில் முக்காடு அணியவில்லை. மேலும், இரானில் பெண்கள் ஆணுடன் கூட பொது இடங்களில் நடனமாட அனுமதி கிடையாது. அத்துடன், நடனமாடிய வீடியோவை, அவர்கள் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். இது வைரலானதை அடுத்து, கடந்த நவம்பர் மாதம் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இஸ்லாமிய குடியரசின் சட்டங்களை மீறி பொது இடத்தில் நடனமாடிய குற்றச்சாட்டில், அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் அவர்களுக்கு 10 ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து, செவ்வாய்க்கிழமையன்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அத்துடன் இணையத்தைப் பயன்படுத்துவதற்கும் இரானிலிருந்து வெளியேறுவதற்கும் அந்த ஜோடிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக, அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.