உஷார் மக்களே!! இங்கெல்லாம் நாளை இடி மின்னலுடன் கூடிய மழை

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று 08:30 மணி அளவில்  தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை-திரிகோணமலையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து  தென்கிழக்கே சுமார் 420 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மெதுவாக  மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கக் கூடும்.

 இதன் காரணமாக, நாளை மற்றும் அதற்கு பிறகு வரும் நாட்களில் தமிழகத்துக்கான வானிலை முன்னறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

நாளை தென்தமிழக  மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு  இடங்களிலும்  இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் (03.02.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு  இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை  பெய்யக்கூடும். 04.02.2023 அன்று தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் லேசான/மிதமான மழை   பெய்யக்கூடும்.

ஐந்தாம் தேதியன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை   பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும்  குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். 

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான /   மிதமான மழை   பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும்  குறைந்தபட்ச வெப்பநிலை 23  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):    

கோடியக்கரை (நாகப்பட்டினம்) 4, வேதாரண்யம் (நாகப்பட்டினம்) 3, வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), தலைஞாயிறு (நாகப்பட்டினம்), திருப்பூண்டி (நாகப்பட்டினம்) தலா 2.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

02.02.2023: இலங்கை மற்றும்  தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள்,  மன்னார் வளைகுடா மற்றும்  குமரிக்கடல்  பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  

03.02.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள்,  மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல்  பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  

04.02.2023: குமரிக்கடல் பகுதிகளில்  சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

சமீபத்திய வானிலை தகவல் பற்றி மேலும் தெரிந்துகொள்ள mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும். 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.