சலுகை அறிவிப்புகள் வருமா..? இன்று மத்திய பட்ஜெட் – நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல்

புதுடெல்லி,

மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய கடைசி முழு பட்ஜெட் என்பதால் சலுகைகள் பற்றிய அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய பட்ஜெட் தாக்கல்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனாதிபதி திரவுபதி முர்முவின் உரையுடன் நேற்று தொடங்கியது. ஜனாதிபதி உரையைத்தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை தாக்கலானது. இதில் நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து அடுத்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று (1-ந் தேதி) காலை 11 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட், அவர் தொடர்ச்சியாக தாக்கல் செய்கிற 5-வது பட்ஜெட் ஆகும். இது காகிதமில்லா பட்ஜெட் ஆகும். மடிக்கணினி மூலம்தான் இந்த பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

அடுத்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடக்க உள்ளதால், இதுதான் அவர் தாக்கல் செய்கிற முழுமையான கடைசி பட்ஜெட், அடுத்த ஆண்டு தேர்தலுக்கு முன்பாக இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்படும்.

வருமான வரிச்சலுகைகள்?

இந்த மத்திய பட்ஜெட் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலுக்கு முந்தைய கடைசி முழுமையான பட்ஜெட் என்பதால், இதில் கவர்ச்சிகரமான அம்சங்களுக்கு பஞ்சம் இருக்காது என்று கூறப்படுகிறது.

அவை பற்றிய ஒரு பார்வை:-

* புதிய வரி விதிப்புகள் தவிர்க்கப்படலாம்.

* மாதச்சம்பளதாரர்களுக்கு வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2½ லட்சமாக இருப்பதை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது. இது குறைந்தபட்சம் ரூ. 3 லட்சமாக உயர்த்தப்படலாம்.

* வருமான வரிச்சட்டம் பிரிவு 80-சியின்கீழ் வழங்கப்படுகிற வரி விலக்கு சலுகை ரூ.1½ லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படக்கூடும்.

* வருமான வரி விதிப்பு அடுக்கில் மாற்றம் வரலாம்.

பெண்களுக்கு சிறப்பு திட்டங்கள்

* மின்சார வாகனங்களின் உற்பத்தி, விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் சலுகைகள் வழங்கப்படலாம்.

* உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதற்கும், 100 நாள் வேலை திட்டத்துக்கும் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

* விவசாயிகளுக்கு கூடுதல் கடன்கள் வழங்க திட்டம் எதுவும் அறிவிக்கப்படலாம்.

* பெண்களை கவரும் விதத்தில் அவர்களுக்கான சிறப்பு திட்டங்கள் ஏதாவது வரக்கூடும்.

* இளைய தலைமுறையினரைக் கவரும் வகையில் புதிய வேலை வாய்ப்பு திட்டங்கள் அறிவிக்கப்படலாம்.

இப்படி பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளன.

சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் இருக்கும் என்று பிரதமர் மோடி கூறி இருப்பது இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.

முன்கூட்டியே முடிக்க திட்டம்

இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு 13-ந் தேதி முடிவு அடைய இருந்தது. அதை முன்கூட்டியே 10-ந் தேதி முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசியல் கட்சிகள் எழுப்பி உள்ளன. 11-ந் தேதி, 12-ந் தேதி சனி, ஞாயிறு விடுமுறையையொட்டி 10-ந் தேதியே முதல் அமர்வை முடிக்கலாம் என்று கட்சிகள் கேட்டுள்ளன.

அலுவல் ஆய்வு குழு முன் இந்தக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை பரிசீலிப்பதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறி உள்ளார் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.