பட்ஜெட் 2023: கர்நாடகாவிற்கு அடிச்ச ஜாக்பாட்… ரூ.5,300 கோடி ஒதுக்கிய பின்னணி!

2023-24
மத்திய பட்ஜெட்
தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இன்று காலை 11 மணிக்கு வாசிக்க தொடங்கிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு மணி நேரம் 25 நிமிடங்கள் உரையை வாசித்து முடித்தார். இது மிகவும் குறுகிய நேரம் வாசிக்கப்பட்ட பட்ஜெட்டாக பார்க்கப்படுகிறது. இதற்கு முந்தைய நிதியமைச்சர்கள் பலரும் 2 மணி நேரத்திற்கு மேல் உரையை வாசித்துள்ளனர்.

மத்திய பட்ஜெட் தாக்கல்

கடந்த 2020ஆம் ஆண்டு நிர்மலா சீதாராமன் 2 மணி நேரம் 17 நிமிடங்கள் வாசித்ததே மிகப்பெரிய பட்ஜெட்டாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்றைய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், ஒதுக்கிய நிதி அனைத்தும் பொதுவானவையாகவே இருந்தன. ஆனால் கர்நாடக மாநிலத்திற்கு மட்டும் ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்கு 5,300 கோடி ரூபாய் ஒதுக்கி மத்திய அரசு ஆச்சரியம் அளித்தது. ஏன் மற்ற மாநிலங்களில் முடங்கி கிடக்கும் திட்டங்கள் எதுவும் இல்லையா?

கர்நாடகாவில் தேர்தல்

இல்லை புதிய திட்டங்கள் தேவைப்படவில்லையா? என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. இதன் பின்னணியில் தேர்தல் கணக்கு இருக்கிறது. வரும் மே மாதம் கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தில் தற்போது பாஜக தான் ஆட்சியில் இருக்கிறது. எனவே அடுத்து வரும் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றும் வகையில் இத்தகைய அறிவிப்பு இடம்பெற்றிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.

பத்ரா மேலணை திட்டம்

அதுவும் ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்காக 5,300 கோடி ரூபாய் என்பது கவனிக்கத்தக்கது. அப்படியென்ன திட்டம்? என்ற தேடல் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அது பத்ரா மேலணை திட்டம் ஆகும். கர்நாடக மாநிலத்தில் வறட்சி பாதித்த மாவட்டங்களான சிக்கமகளூரு, சித்ரதுர்கா, தும்கூர், தாவனகரே ஆகியவற்றில் 2.25 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் நுண்ணீர் பாசனத்தை ஊக்குவிக்கும் விதமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அரசின் இலக்கு

இந்த விஷயத்தை கையிலெடுத்த மாநில அரசு 21,473 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தி வருகிறது. பத்ரா மேலணை திட்டத்தின் மூலம் ஏரிகளை நிரப்பவும், 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த திட்டத்தை தேசிய திட்டமாக அறிவித்து செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கோரிக்கை விடுத்தது.

தேர்தல்… தேர்தல்…

இதுதொடர்பாக கோப்புகள் பரிசீலனையில் இருந்து வந்தன. இந்த திட்டத்தில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இந்நிலையில் தான் நடப்பு பட்ஜெட்டில் 5,300 கோடி ரூபாயை ஒதுக்கி கர்நாடக மாநிலத்திற்கு ஜாக்பாட் மழை பொழிந்துள்ளது மட்திய அரசு. இது திட்டத்தை அமல்படுத்த பெரிதும் உதவிகரமாக இருந்தாலும் தேர்தலை மனதில் வைத்தே அறிவிக்கப்பட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் இதுபற்றி வாசிக்கையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் சிலர் ”தேர்தல்… தேர்தல்…” என கோஷமிட்டதை பார்க்க முடிந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.