11 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையில் இன்று கரையை கடப்பதால்,டெல்டா உட்பட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று கூறியதாவது:

காற்றழுத்த தாழ்வு மண்டலம்: ஜன.31-ம் தேதி (நேற்று) பகல்11.30 மணி நிலவரப்படி, இலங்கையின் திரிகோணமலையில் இருந்து கிழக்கே சுமார் 290 கி.மீ தொலைவிலும், காரைக்காலில் இருந்து கிழக்கு – தென்கிழக்கே சுமார் 510 கி.மீ. தொலைவிலும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டிருந்தது.

இது மாலை வரை மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வந்தது. இதன்பிறகு, மேற்கு – தென்மேற்கு திசையில் நகர்ந்து, பிப்.1-ம் தேதி (இன்று) முற்பகலில் இலங்கையில் கரையை கடக்கக் கூடும்.

இதன் காரணமாக, பிப்.1-ம் தேதிதமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 1-ம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.