பொங்கல் பண்டிகையையோட்டி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் எருதுவிடும் விழா விமர்சையாக நடைபெற்றது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கோபசந்திரம் பகுதியில் உள்ள சின்னதிருப்பதி கோவில் திருவிழாவையொட்டி இன்று எருது விடும் விழா நடத்த திட்டமிடப்பட்டடு இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு செய்திருந்தனர்.
இந்நிலையில் விழாவையோட்டி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர். ஆனால் திருவிழாவில் எருது விடும் விழாவை நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெறாததால் தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து விழாவிற்கு தடை விதிக்கப்பட்டதால் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவ்வழியாக வந்த வாகனங்களை மறித்து, மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
இதைத்தொடர்ந்து போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகள் வீச்சியும் போராட்டக்காரர்களை விரட்டி அடித்தனர். இந்நிலையில் இளைஞர்களின் போராட்டம் எதிரொலியாக மாவட்ட கலெக்டர் எருதுவிடும் விழா நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
இருப்பினும் போராட்டம் முடிவுக்கு விழாமல், கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் எருது விடும் விழா நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு போலீசார் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 15 க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்துள்ளனர்.
இதையடுத்து போலீசார் அவர்கள் மீது மீண்டும் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீச்சு அடித்தும் போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் போர்க்களமாக காட்சியளித்தது.
மேலும் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் 200 பேரும் விடுவிக்கப்படுவதாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளனர். மேலும், வீடியோ ஆதாரத்தை வைத்து வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்வோம் என்றும் மாவட்ட எஸ்.பி. சரோஜ்குமார் தாகூர் விளக்கமளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.