சீக்ரெட் கோடு வேர்டு; மசாஜ் பார்லர்களில் பாலியல் தொழில் – கும்பகோணத்தில் தொடரும் கைது நடவடிக்கை!

கோயில் நகரமாக அறியப்படும் கும்பகோணத்தில் தங்கும் விடுதிகள், குடியிருப்புப் பகுதிகள், மசாஜ் சென்டர்கள் போன்றவற்றில் பாலியல் தொழில் தங்குத் தடையில்லாமல் நடப்பதாகப் புகார் கிளம்பியிருக்கிறது. ராமசாமி கோயில், திருவிடைமருதூர் அருகில் அமைந்திருக்கும் இரண்டு தனியார் மசாஜ் சென்டர்களில், கடந்த வாரம் போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட நான்கு பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

இது குறித்து திருவிடைமருதூர் டி.எஸ்.பி ஜாபர் சித்திக்கிடம் பேசினோம். “திருவிடைமருதூர் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, குடியிருப்புப் பகுதியை ஒட்டியிருந்த ஒரு வணிக வளாகம் பெயர்ப் பலகை இல்லாமல் இருந்தது. சந்தேகத்தின் பேரில் அங்கு சோதனை நடத்தினோம். அப்போது, மசாஜ் சென்டர் என்கிற பெயரில் அங்கு பாலியல் தொழில் நடந்துவந்தது தெரியவந்தது. இதையடுத்து திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறைச் சேர்ந்த புரோக்கர் மணிகண்டன் உட்பட இரண்டு பேரைக் கைதுசெய்தோம். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கும்பகோணத்தில் இன்னும் சில மசாஜ் சென்டர்களிலும் சோதனை நடத்தி, மேலும் இருவரைக் கைதுசெய்திருக்கிறோம்.

கைதுசெய்யப்பட்ட புரோக்கர் மணிகண்டனுக்கு ஆன்லைன் கேம் வாயிலாக, கும்பகோணத்திலுள்ள மசாஜ் சென்டர் உரிமையாளரின் தொடர்பு கிடைத்திருக்கிறது. அப்போது தனக்கு வேலை இல்லை என்று மசாஜ் சென்டர் உரிமையாளரிடம் தெரிவித்திருக்கிறான் மணிகண்டன். உடனே, `நீ கும்பகோணத்துக்கு வா… இங்கு என்னுடன் சேர்ந்து சம்பாதிக்கலாம்’ என்று ஆசைவார்த்தைக் கூறியிருக்கிறார் மசாஜ் சென்டரின் உரிமையாளர்.

போலீஸ் விசாரணை

அதன் பிறகு வாட்ஸ்அப் கால்கள் மூலம் கஸ்டமர்களைப் பிடிப்பது, ‘கோடு வேர்டு’ மூலம் அவர்களை மசாஜ் சென்டர்களுக்கு அழைத்து வருவது எனத் தொடர்ந்து புரோக்கர் வேலைகளில் ஈடுபட்டுவந்திருக்கிறான் மணிகண்டன். தற்போது மணிகண்டன் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான். மற்றவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறோம். மசாஜ் சென்டர்களின் உரிமையாளர்கள் தலைமறைவாகிவிட்டனர். அவர்களைத் தேடும் பணி நடைபெற்றுவருகிறது” என்றார்.

கைது நடவடிக்கை மேற்கொண்ட போலீஸாரிடம் பேசினோம். “ஆன்லைனில் மசாஜ் சென்டர் விளம்பரத்தைப் பார்த்துவிட்டு வரும் ஆண்களிடம், `மசாஜ் தவிர எக்ஸ்ட்ராஸ் இருக்கு… உங்களுக்கு எது வேணும்?’ என்று புன்னகையுடன் கோடு வேர்டில் பேசி, பாலியல் தொழிலுக்கு அழைப்பது இவர்களின் பாணி.

பாலியல் தொழிலில் ஈடுபட்ட புரோக்கர் மணிகண்டன்

இவர்களால் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களில் ஒருவர், மகனைப் படிக்கவைப்பதற்குப் பணம் தேவைப்பட்டதால் இந்தத் தொழிலுக்கு வந்ததாகத் தெரிவித்ததுதான் வேதனை. அவர்களை தஞ்சை அரசுக் காப்பகத்தில் சேர்த்திருக்கிறோம்” என்றார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.