சென்னை: “பாஜக – அதிமுக ஒன்றுபட வேண்டும் என தமிழக மக்கள் விரும்புகின்றனர்” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சென்னையிலிருந்து இன்று மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: ”மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை அனைத்து நிலையிலும், அனைத்து தரப்பிலும் இந்தியாவை முன்னேற்றப் பாதைக்கு எடுத்து ச்செல்லும். இதிலுள்ள சாரம்சத்தை புரிந்துகொண்டு தமிழக அரசு முறையாக மத்திய அரசின் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மதுரை எய்ம்ஸ் குறித்து நிதிநிலை அறிக்கையின் விரிவான பதிலில், அது இடம் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
அதிமுக சட்ட விதிப்படி நடந்த அமைப்பு ரீதியான தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக நானும், இணை ஒருங்கிணைப்பாளராக கே. பழனிச்சாமியும் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவி 2026 வரை இருக்கிறது. இரட்டை இலை சின்னத்தை கேட்டு வந்தால் நான் கையொப்பமிடுவேன். சசிகலா விரைவில் உறுதியாக சந்திப்பேன்.
வேட்பாளர் அறிவிப்புக்குப் பிறகு பாஜகவில் இருந்து அழைப்பு வந்தால், முறைப்படியான அறிவிப்பை நானும், பாஜக தலைமையும் அறிவிப்போம். அதிமுகவின் தொண்டர்கள், தமிழக மக்கள், பாஜகவும் அதிமுக ஒன்றுபட வேண்டும் என விரும்புகின்றனர். எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கின்றோம். எங்களுடைய அறிவிப்பு முறையான அறிவிப்பு. தேசிய ஜனநாயக கட்சியில் முறையான அறிவிப்பு வெளியிடவேண்டுமானால், அது எங்களிடம் இருந்தே வரும். ஈரோடு கிழக்கு தொகுதியில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
கருணாநிதி நினைவுச் சின்னமாக பேனாவை நிறுவும் இடம் குறித்து சுற்றுப்புற ஆய்வாளர்களிடம் கருத்து கேட்டிருக்கிறேன். அங்கு வாழ்கின்ற மீன்களின் வளம் குறித்தும் கேட்டுள்ளேன். மீனவர்களின் கருத்துககள், பல்வேறு மீனவ சங்கங்களின் கருத்துக்களையும் நேரடியாக கேட்டு அறிய உள்ளேன். அதற்குப் பிறகு அதிமுகவின் நிலைப்பாட்டை தெரிவிப்பேன்” என்று அவர் கூறினார்.