திருவனந்தபுரம்: கேரளாவில் பிரசவத்துக்காக நிறைமாத கர்ப்பிணியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் கார் தீப்பிடித்து எரிந்ததில் அந்த பெண்ணும், காரை ஒட்டி சென்ற அவரது கணவரும் குடும்பத்தினர் கண் முன்னே கருகி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நெஞ்சை உறைய வைக்கும் இந்த கோர விபத்து கண்ணூரில் நிகழ்ந்துள்ளது. கண்ணூர் அரசு மருத்துவமனைக்கு வெறும் 100 மீட்டர் மட்டுமே தூரத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென காரின் முன்புறம் தீ பிடித்தது.
ஓரிரு வினாடிகளில் காரின் உள்பகுதிக்கும் தீ பரவிய நிலையில் முன் இருக்கையில் அமர்ந்திருந்த கர்ப்பிணி பெண்ணான ரீஷாவும், காரை ஓட்டி சென்ற அவரது கணவர் பிர்ஜிஸும் கார் கதவை திறக்க முடியாமல் அவைய குரல் எழுப்பினர். காரின் பின் பகுதியில் இருந்து இறங்கிய ரீஷாவின் தந்தை, தாய் மற்றும் 8 வயது மகள் உள்ளிட்ட 4 பேர் உடனடியாக வெளியேறியதால் உயிர் தப்பினர். கண் இமைக்கும் நேரத்தில் கார் முழுவதும் பற்றி எரிந்தது. பார்ப்பவர்களை பதற வைத்தது.
கார் தீப்பற்றி எரிவதை கண்டு ஓடிவந்த பொதுமக்கள் கண்ணாடிகளை உடைத்தும், தண்ணீரை ஊற்றியும் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், அவர்களது முயற்சி தோல்வியில் முடிந்ததால் கணவர், மனைவி இருவரும் தீயில் கருகி உயிரிழந்தனர். கண்ணூர் மாவட்டம் குற்றியூரை சேர்ந்த பிரஜித், கர்ப்பிணி மனைவியான ரீஷா, மாமனார், மாமியார் மற்றும் தனது மற்றொரு பெண் குழந்தையுடன் சேர்த்து பிரசவத்திற்காக அழைத்து சென்ற போதே இந்த கோர விபத்து நடந்துள்ளது. கார் பற்றி எறிந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் தீயணைப்பு நிலையம் இருந்தபோதும் அவர்கள் வருவதற்குள் கணவன், மனைவி தீயில் கருகி இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.