100 நாள் வேலைத் திட்டத்தை நிறுத்தப் போகிறார்களா? ரவிக்குமார் எம்.பி., கேள்வி!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்றைய தினம் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த நிலையில், 100 நாள் வேலைத் திட்டம் என அழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்துக்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு கடுமையாகக் குறைக்கப்பட்டிருப்பதாக விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், 100 நாள் வேலைத் திட்டத்தை நிறுத்தப் போகிறார்களா என எனவும் அவர் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து ரவிக்குமார் எம்.பி., வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “2021 – 22 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அந்தத் திட்டத்திற்கு 98,467.85 கோடி ஒதுக்கப்பட்டது, 2022-23 பட்ஜெட்டில் அது 73 ஆயிரம் கோடியாகக் குறைக்கப்பட்டது. இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அதற்கான நிதியை 60 ஆயிரம் கோடியாகக் குறைத்திருக்கிறார்கள்.

100 நாள் வேலை திட்டம் என்று அது அழைக்கப்பட்டாலும் மிகக் குறைவாக நிதி ஒதுக்கப்படுவதால் இதில் பதிவு செய்துகொண்டு வேலை செய்யும் குடும்பம் ஒன்றுக்கு சராசரியாக ஆண்டுக்கு 20 நாட்கள் தான் வேலை கிடைக்கிறது. இப்போது மேலும் நிதி குறைக்கப்பட்டு இருப்பதால் இதில் 10 நாட்களுக்குக் கூட வேலை கொடுக்க முடியாது.

கிராமப்புற ஏழை மக்களின் வறுமையை ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்தை மோடி அரசு கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்று கொண்டிருக்கிறது. கிராமப்புற ஏழைகளின் வயிற்றிலடிக்கும் மோடி அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.