வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள், அவர்களை வழியனுப்ப மற்றும் அழைத்து செல்ல வரும் உறவினர்கள், இணைப்பு விமானத்திற்காக காத்திருக்கும் பயணிகள் என்று அனைவரும் பலமணி நேரம் விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை வருகிறது.
அப்போது, சரி வேறு எங்கேயாவது சென்று வரலாம் என்று நினைத்தால் அதிக தூரம் செல்ல வேண்டிய சூழல் உள்ளதால் விமான நிலையத்திலேயே அதிக நேரம் உட்காந்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
அந்தவகையில், சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் கார் பார்க்கிங், ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ், திரையரங்கம், ஹோட்டல்கள் மற்றும் கடைகள் போன்றவற்றின் கட்டிட பணிகள் நடைபெற்று தற்போது முடிவடைந்துள்ளன.
இந்த நிலையில், நேற்று சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக அமைக்கப்பட்ட ஐந்து திரைகள் கொண்ட பிவிஆர் திரையரங்கம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த திரையரங்கம் தான் இந்தியாவிலேயே முதல் முறையாக விமான நிலையத்தில் அமைக்கப்பட்ட திரையரங்கம் ஆகும்.
இந்த திரையரங்கம் சென்னை விமான நிலையத்திற்கு வருபவர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்து திரைகள் கொண்ட இந்த திரையரங்கில் சுமார் 1,150 பேர் ஒரே நேரத்தில் படம் பார்க்கலாம்.
இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிப்பவர்கள் புதிதாக கட்டப்பட்ட இணைப்பு பாலம் வழியாக திரையரங்கை அடையலாம் என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள திரையரங்குகளை நடிகர் சதீஷ் ,ஆனந்த்ராஜ், கூல் சுரேஷ், இயக்குனர் வெங்கி மற்றும் தயாரிப்பாளர் விஜய் பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.