டெல்லியின் முடிவை அறிவித்த அண்ணாமலை: ஓபிஎஸ் ஓகே.. எடப்பாடி எஸ் சொல்வாரா?

டெல்லி சென்றுவிட்டு சென்னை திரும்பிய அண்ணாமலை வந்த வேகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரையும் தனித்தனியே சந்தித்துள்ளார்.

அண்ணாமலை முதலில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள
எடப்பாடி பழனிசாமி
இல்லத்திற்கு சென்றார். அவருடன் தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி, துணைத் தலைவர் கரு.நாகராஜன் உடனிருந்தனர்.

அண்ணாமலை வருவது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் ஜெயக்குமாரும் வந்திருந்தார். நேற்று பாஜக முக்கிய தலைவர்களை சந்தித்து வந்த அண்ணாமலை முக்கிய தகவல் ஒன்றை எடப்பாடி பழனிசாமியிடம் கூறியுள்ளதாக சொல்கிறார்கள்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அளித்துள்ள பதில் மனுவில் அதிமுகவில் இன்னும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் முறையே தொடர்வதாக குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் இருவரும் இணைவது அவசியம் என்று அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தியுள்ளதாக கூறுகிறார்கள்.

இந்த இடைத்தேர்தலைப் பொறுத்தவரை இருவருமே தங்கள் வேட்பாளரை வாபஸ் பெற்று பாஜக சார்பில் பொது வேட்பாளரை நிறுத்தினால் ஆதரவு தருவீர்களா என்றும் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டுள்ளதாக சொல்கிறார்கள்.

இன்று உச்ச நீதிமன்றத்தில் இபிஎஸ் தாக்கல் செய்த இடையீட்டு மனு மீதான விசாரணை மீண்டும் நடைபெற உள்ள நிலையில் இந்த சந்திப்பும், அண்ணாமலையின் கோரிக்கையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின்னர் அப்படியே ஓ.பன்னீர் செல்வம் இல்லத்துக்கு அண்ணாமலை, சி.டி.ரவி உள்ளிட்டோர் சென்றனர்.

அவரிடமும் இதே கோரிக்கையை வைத்துள்ளார்கள். இதற்கு ஆரம்பம் முதலே ஓபிஎஸ் தயாராகத் தான் இருக்கிறார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் முடிவு என்ன, பாஜகவின் கோரிக்கைக்கு சம்மதம் தெரிவிப்பாரா என்பது தான் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.